வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: செவ்வாய், 2 மே 2017 (15:07 IST)

தினகரனுக்கு ஆப்பு மேல் ஆப்பு: வழக்கு பதிவு செய்தது அமலாக்கத்துறை!

தினகரனுக்கு ஆப்பு மேல் ஆப்பு: வழக்கு பதிவு செய்தது அமலாக்கத்துறை!

இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டு தற்போது 15 நாட்கள் நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் மீது அமலாக்கத்துறை புதிய வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளது.


 
 
டெல்லியில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சுகேஷ் சந்திரசேகர் என்ற இடைத்தரகர் டெல்லி குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் டிடிவி தினகரன் இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க பல கோடி ரூபாய் பேரம் பேசியதாக கூறினார்.
 
மேலும் சுகேஷிடம் இருந்து அப்போது 1.30 கோடி ரூபாய் அப்போது கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து டிடிவி தினகரன் மீது வழக்கு பதிவு செய்து அவரிடம் விசாரணை நடத்தி பின்னர் அவரை கைது செய்தனர் டெல்லி காவல்துறையினர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தினகரனை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர் குற்றப்பிரிவு போலீசார்.
 
இந்த நேரத்தில் அதிரடி திருப்பமாக டிடிவி தினகரனின் ஹவாலா ஏஜெண்ட் நரேஷ் டெல்லியில் குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். தாய்லாந்தில் இருந்து கிளம்பி டெல்லி வந்தபோது அவரை கைது செய்தனர்.
 
சென்னையிலிருந்து கொச்சி வழியாக 10 கோடி ரூபாயை நரேஷ் அனுப்பியதாக கூறப்பட்டது. டெல்லியை சேர்ந்த நரேஷுக்கும் டிடிவி தினகரனுக்கும் இடையே நேரடி தொடர்பு இருந்ததாகவும் பேசப்படுகிறது. மேலும் நரேஷிடம் இருந்து 50 லட்சம் ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டது.
 
5 நாட்கள் போலீஸ் காவல் முடிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தினகரனுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. இந்நிலையில் தினகரன் இந்த விவகாரத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.
 
பொதுவாக இது போன்ற வழக்குகளில் தகவல்கள் கிடைக்கும் போது வருமான வரித்துறையினருக்கும், அமலாக்கத்துறைக்கும் தகவல் கொடுப்பது பொதுவான ஒன்றுதான். அதன்படி டெல்லி குற்றப்பிரிவு காவல்துறை அளித்த தகவலின் அடிப்படையில் அமலாக்கத்துறை தினகரனுக்கு எதிராக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.