1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: கோயம்புத்தூர் , திங்கள், 15 ஏப்ரல் 2024 (14:19 IST)

மருதமலை படிக்கட்டு பாதையில் முகாமிட்ட யானை கூட்டம் பக்தர்களுக்கு மலையில் நடந்து செல்ல தடை விதித்த வனத்துறை

தமிழ்ப் புத்தாண்டு சித்திரை திருநாளை முன்னிட்டு மருதமலையில் பக்தர் கூட்டம் அலைமோதிய நிலையில் தமிழ் கடவுள் முருகனை தமிழ் புத்தாண்டு தினத்தன்று ஏராளமான பக்தர்கள் படிக்கட்டு வழியாகவும்,மலைப் பாதை வழியாகவும், கோயில் பேருந்து மூலமாகவும் சென்று தரிசனம் செய்வது வழக்கம்.
 
இந்நிலையில் வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் உணவு தண்ணீர் தேடி  14 யானைகள் கொண்ட கூட்டம் படிக்கட்டு பாதையில் முகாமிட்டதால் அந்த வழியாக செல்லும் பக்தர்களுக்கு வனத் துறையினர் தடை விதித்து இருந்தனர். இந்த தகவல் தெரியாமல் சில பக்தர்கள் வனத்துறை மற்றும் காவல்துறையினர் தமிழ் கடவுள் முருகனை தரிசிக்க செல்ல அனுமதி மறுப்பதாக கூறி சமூக வலைதளங்களில் வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர்.
 
மேலும் அங்கு முகாமிட்டு இருந்த யானைக் கூட்டத்தை வனப் பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். 
 
தமிழ் புத்தாண்டு அன்று தமிழ் கடவுள் முருகனை தரிசிக்க வந்த பக்தர்களுக்கு நேர்ந்த சோதனையை முருகப்பெருமாள் சரி செய்து பக்தர்களுக்கு அருள் ஆசி வழங்க வேண்டும் என மனம் உருக வழிபட்டு சென்றனர் பக்தர்கள்.