வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: சனி, 6 மே 2017 (12:25 IST)

பாஜக கனவை தகர்க்க ஒன்றிணைய வேண்டும் - குட்டிக்கதை மூலம் உணர்த்திய எடப்பாடி

அதிமுகவின் இரு அணிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
அதிமுக தற்போது இரு அணிகளாக பிரிந்து கிடக்கிறது. ஜெ.வின் மரணம் குறித்து விசாரணை செய்யப்பட வேண்டும், சசிகலா குடும்பத்தினரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்கிற ஓ.பி.எஸ் அணியினரின் கோரிக்கையை எடப்பாடி அணி ஏற்காததால், இதுவரை அணிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தையே நடைபெறாமல் இருக்கிறது. எனவே, ஓ.பி.எஸ் தன்னுடைய ஆதரவாளர்களோடு தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் தொடங்கி விட்டார்.
 
இந்நிலையில், மதுரையில் நேற்று நடந்த ஒரு விழாவில் முதல்வர் எடப்படி பழனிச்சாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் ஜெ.வின் பாணியில் ஒரு குட்டிக்கதை கூறினார்.
 
கூட்டம் கூட்டமாக பறக்கும் புறாக்களை பிடிக்க ஒரு வேடன் திட்டமிட்டு, அதற்காக வலை ஒன்றை விரித்து வைத்தான். அதில் சில புறாக்கள் சிக்கிக் கொண்டன. அதைக் கண்டதும், அந்த பறவைகளை பிடிக்க வேடன் ஓடி வந்தான். அனால், இதைக் கண்ட மற்ற புறாக்கள் அந்த வலைக்குள் சென்று சிக்கிக் கொண்ட புறாக்களுடன் சேர்ந்து அந்த வலையை தூக்கிக் கொண்டு ஒன்றாக பறந்து சென்றுவிட்டது. எனவே, ஒற்றுமையுடன் இருந்தால்தான் வெற்றி பெற முடியும் என அவர் கூறினார். 
 
அவர் பாஜகவைத்தான் வேடன் என சொல்கிறார் என அங்கிருந்த அதிமுக தொண்டர்கள் பேசிக் கொண்டனர்.