1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: திங்கள், 8 மே 2017 (10:03 IST)

அதிகாலையில் சென்னையில் துயரச் சம்பவம்: மின்கசிவால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி!

அதிகாலையில் சென்னையில் துயரச் சம்பவம்: மின்கசிவால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி!

இன்று அதிகாலை சென்னை வடபழனியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் கீழ் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டு அந்த புகை மூட்டத்தால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு 2 சிறுவர்கள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.


 
 
வடபழனி தெற்கு சிவன் கோயில் தெருவில் உள்ளது அந்த அடுக்குமாடி குடியிருப்பு. அதன் கீழ் தளத்தில் உள்ள மின்சார பெட்டியில் ஏற்பட்ட மின்கசிவினால் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அங்கிருந்த இரண்டு சக்கர வாகனங்களுக்கும் தீ பரவியது.
 
அதில் 20-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயில் கருகி நாசமாகியது. இதனால் ஏற்பட்ட புகை மூட்டத்தால் மூச்சு திணறி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து ஏற்பட்டது அதிகாலை 4.54 மணி என்பதால் அனைவரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்துள்ளனர். தூக்கத்தில் இருந்து விழிக்காமலே அவர்கள் உயிரழந்த துயரச் சம்பவம் நடந்துள்ளது.
 
இந்த புகை மூட்டத்தால் மூச்சு திணறல் ஏற்பட்டு கீழ் தளத்தில் வசித்த அனைவரும் மயக்கமடைந்தனர். இதனையடுத்து தீயணைப்பு துறையினர் வரவழைக்கப்பட்டு தீயை அணைத்துவிட்டு அவர்களை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
 
அதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தனர். மேலும் 5 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீ முழுமையாக அனைக்கப்பட்டு தடய அறிவியல் துறையினரும், அதிகாரிகளும் தீ விபத்து நடந்த கட்டடத்துக்குள் சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர்.
 
தீ விபத்து எப்படி நடந்தது என்றும், விபத்துக்காண காரணம் என்ன என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படும் என்று சென்னை ஆட்சியர் கூறினார். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கவும் காயமடைந்தவர்களுக்கு உரிய உதவிகள் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார்.