திராவிட கட்சிகளை ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இயக்கங்கள் அழிக்க நினைக்கின்றன - மு.க.ஸ்டாலின்
ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இயக்கங்கள், திராவிட கட்சிகளை அழிக்க நினைக்கின்றன, ஆனால் யார் நினைத்தாலும் திமுகவை அழிக்க முடியாது என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
முன்னால் பால்வளத்துறை அமைச்சரும், திமுக ஆதிதிராவிட மாநில நலக்குழு செயலருமான க.சுந்தரத்தின் மகன் டாக்டர் க.சு. செந்தில் ராஜ்குமார், டாக்டர் ரா.தீப்தி கிருஷ்ணா ஆகியோரின் திருமணம் மீஞ்சூரில் உள்ள எழில் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்தத் திருமண நிகழ்ச்சிக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார். அப்போது அவர் பேசுகையில், “திராவிட கட்சிகளை ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இயக்கங்கள் அழிக்க நினைக்கின்றது. ஆனால் யார் நினைத்தாலும் திமுகவை அழிக்க முடியாது.
திராவிட இயக்கங்கள் தமிழகத்தில் தோன்றவில்லை என்றால், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்கள் வாழ்க்கையின் முன்னேற்றம் ஏட்பட்டிருக்காது.
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறைத் தண்டனை பெற்றதால்தான் ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் தற்பொழுது நடைபெறவுள்ளது, என்பதை பொதுமக்களிடம் கட்சி தொண்டர்கள் விளக்கி கூற வேண்டும்.
மேலும் பால்வளத்துறையில் நடைபெற்றுள்ள ஊழல் மற்றும் முறைகேடுகளை அதிமுக அரசு முறையாக விசாரணை செய்யவில்லை“ என்று ஸ்டாலின் கூறினார்.