1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 29 அக்டோபர் 2018 (11:00 IST)

முரசொலி கட்டுரை; ரஜினியிடம் வருத்தம் தெரிவித்தாரா ஸ்டாலின்?

ரஜினியை விமர்சித்து தங்கள் கட்சி பத்திரிக்கையான முரசொலியில் வந்த செய்திக்காக திமுக தலைவர் ஸ்டாலின் தொலைபேசியில் ரஜினியிடம் பேசி வருத்தம் தெரிவித்ததாகத் தகவல் பரவியுள்ளது.

ரஜினி தன் ரசிகர்களுக்காக வெளியிட்ட அறிக்கை ஒன்றை மையப்படுத்தி ரஜினியைக் கேலி செய்யும் விதமாக முரசொலி ஒரு கட்டுரை ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. அதில் ‘மன்றத்திற்காக இத்தனை வருடங்கள் உழைத்த தங்களின் உண்மையான ரசிகர்கள் நியாயமானப் பதவிக்கு ஆசைப்படுவதில் என்ன தவறு? தாங்கள் மட்டும் இத்தனை வருடங்கள் சினிமாவில் நடித்ததால் மட்டுமே முதல்வர் பதவிக்கு ஆசைப்படலாமா?. பதவிக்காக அரசியல் இல்லை எனில் பெரியார் போல கொள்கைக்காக கட்சி ஆரம்பித்து இயக்கமாக செயல்பட வேண்டியதுதானே?’ என்று வெளியிட்டிருந்தது.

இந்த செய்தி தமிழகம் முழுவதும் ரஜினி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒரு பக்கம் ரஜினி அரசியலில் இறங்கியதும் தனது ரசிகர்களை விட்டு விலகி வேறு சிலருக்குப் பதவிகளை கொடுக்க முடிவு செய்துள்ளார் என்றும் மற்றொரு தரப்பில் ரஜினியையும் அவரது ரசிகர்களையும் பிரிக்க திமுக சதி செய்கிறது எனவும் சர்ச்சைகள் எழுந்தன.

அதனால் ரஜினி உடனடியாக தனது ரசிகர்களையும் மன்ற நிர்வாகிகளையும் தனது ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்குப் பிறகு தன்னையும் ரசிகர்களையும் யாராலும் பிரிக்க முடியாது என அறிக்கை வெளியிட்டார்.

இதன்பின் முரசொலி ஆசிரியர் இந்த செய்தி குறித்து வெளியிட்ட வருத்தத்தில் ‘இனிபோன்ற செய்திகளை வெளியிடும்போது கவனமாக செயல்படுமாறு ஆசிரியர் குழுவுக்கு அறிவுறுத்தப்படுகிறது’ என செய்தி வெளியிட்டார். இதையடுத்து முரசொலி ஆசிரியர் ரஜினியை சந்தித்ததாகவும் செய்திகள் உலாவின.

தற்போது இந்த சர்ச்சைகளின் உச்சமாக திமுக தலைவர் ஸ்டாலின் தொலைபேசியில் ரஜினியிடம் இந்த செய்தி தொடர்பாக பேசி சமாதானம் செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும் ஸ்டாலின் முரசொலி நிர்வாகிகளையும் அழைத்துக் கண்டித்ததாகக் கூறப்படுகிறது.