1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 11 மார்ச் 2019 (16:09 IST)

திமுக தனித்துப் போட்டியிடும் – ஸ்டாலின் விளக்கம் !

தமிழகத்தில் நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலில் 18 தொகுதிகளிலும் திமுக வேட்பாளர்களே போட்டியிடுவார்கள் என்று அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலோடு தமிழகத்தில் உள்ள 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. நாடாளுமன்ற தேர்தலில் தொகுதிப் பங்கீடு செய்துள்ள கட்சிகள் சட்டமன்றத் தேர்தலிலும் தொகுதிகளை பங்கிட்டுக் கொள்ளுமா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அனைத்தும் இடைத்தேர்தலில் நிற்காமல் திமுகவுக்கே தங்கள் ஆதரவைக் கொடுத்துள்ளதாகத் தெரிகிறது. அதனால் திமுக வேட்பாளர்களே 18 தொகுதிகளிலும் நிற்க இருக்கிறார்கள்.  இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளதாவது :-

நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தாலும், சட்டப்பேரவை இடைத்தேர்தலாக இருந்தாலும், ஏற்கெனவே திமுக தன்னுடைய பிரச்சாரத்தை மிகப்பெரிய அளவில் தொடங்கி விட்டது. தமிழகம் முழுவதும் உள்ள கிராமங்களில் ஊராட்சி சபைக் கூட்டங்கள் மூலமாக தேர்தல் பிரச்சாரங்களை ஏற்கெனவே தொடங்கி எழுச்சியோடும், வெற்றியோடும் நடத்திக் கொண்டிருக்கின்றோம்.

21 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த வேண்டிய ஒரு நிலை. ஆனால், 3 தொகுதிகளைத் தவிர்த்து, 18 தொகுதிகளில் மட்டும் தேர்தல் நடத்தப்போவதாக தேர்தல் கமிஷன் அறிவித்திருக்கின்றது. இதில் ஏதோ உள்நோக்கம் உள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறக்கூடிய இந்த ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காக 15 மாதங்களாக, இந்த 18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தாமல் சதி செய்து கொண்டு வந்திருக்கின்றது.

இடைத்தேர்தல்களைப் பொறுத்தவரை திமுக வேட்பாளர்கள் தான் நிறுத்தப்படுவார்கள். இதுகுறித்து ஏற்கனவே கூட்டணிக் கட்சி வேட்பாளர்களோடு பேசிவிட்டோம்.