வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வெள்ளி, 1 ஜூலை 2016 (10:29 IST)

வைகோ விலை போய், மற்றவர்களை பலியாக்கிவிட்டார்: திமுக கடும் தாக்கு

திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த வாளாடியில், திருச்சி மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட மதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.


 
 
அப்போது பேசிய அவர், “என்னை ராஜதந்திரம் இல்லாதவர் என கருணாநிதி நினைத்து கொண்டிருந்தார். ஆனால், எனது ராஜதந்திரத்தால்தான், ஆட்சி அமைக்க வேண்டிய வாய்ப்புகள் இருந்தும்கூட திமுக ஆட்சிக்கு வரமுடியாமல் போனது என்பதை மறுக்க முடியாது” என்று கூறியதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இது அரசியல் அரங்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது, வைகோவின் உண்மை முகம் வெளியே வந்துவிட்டது என பலர் விவாதித்து வந்தனர். இந்நிலையில் வைகோவின் இந்த பேச்சு குறித்து திமுகவின் மாநிலங்களவை உறுப்பினரும், செய்தி தொடர்பாளருமான டி.கே.எஸ்.இளங்கோவன் பதிலடி கொடுத்துள்ளார்.
 
அவரும் விலை போய், மற்றவர்களையும் பலியாக்கி, கூட்டணி கட்சிகளையும் பலியாக்கி விட்டார். அதிமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டது தான் ராஜதந்திரம் என்றால் ராஜதந்திரத்துக்கு இதைவிட ஒரு கீழான விளக்கத்தை யாராலும் தரமுடியாது. வைகோவின் பேச்சுக்கு எனது இந்த பதிலே போதுமானது என்றார் அவர்.