வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : திங்கள், 3 ஆகஸ்ட் 2015 (23:25 IST)

ஆகஸ்ட் 6ஆம் தேதி- அஹிம்சை முறையில் மனித சங்கிலி போராட்டம்: தேமுதிக அறிவிப்பு

ஆகஸ்ட் 6ஆம் தேதி, தேமுதிக சார்பில் அஹிம்சை வழியில் மனித சங்கிலி போராட்டம் நடைபெறும் என தேமுதிக தெரிவித்துள்ளது.


 

இது குறித்து, தேமுதிக தலமைக் கழகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
தமிழ்நாட்டில், மதுவிலக்கை அமல்படுத்த வேண்டியதன் அவசியத்தை அதிமுக அரசு இன்னும் உணர்ந்ததாக தெரியவில்லை. மதுவினால் இரண்டு தலைமுறைகள் பாதிக்கப்பட்டு, மூன்றாவது தலைமுறையும், பாதிக்கும் பெரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
 
மதுஅரக்கன் பிடியில் இருந்து தமிழகத்தை காப்பாற்ற வேண்டும் என்ற துடிப்போடு,  அனைத்து தரப்பினரும், ஒன்று சேர்ந்து குரல் எழுப்புகிறார்கள். ஆனால், அதிமுக அரசோ, அதையெல்லாம் பொருட்படுத்தாமல், மது விற்பனை மூலம் வரும் வருமானத்திற்காக ஏழை, எளிய நடுத்தர மக்களை மதுவுக்கு பலியாக்கி வருகிறது.
 
தமிழ்நாட்டில், மதுவினால் ஏற்பட்டுள்ள சீரழிவை தடுத்து நிறுத்த, பூரண மதுவிலக்கை வலியுறுத்தி, ஆகஸ்ட் 6ம் தேதி (வியாழக்கிழமை) மாலை 4 மணி முதல் மாலை 5 மணிவரை தேமுதிக சார்பில் கோயம்பேடு முதல் கோட்டைவரை மனித சங்கிலி போராட்டம் அகிம்சை வழியில் நடைபெறும்.
 
சென்னையில் நடைபெறும் இந்த போராட்டத்தில், தலைவர், விஜயகாந்த் தலைமையும், பிரேமலதா விஜயகாந்த் முன்னிலை வகிக்கின்றார். மேலும், அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், மனித சங்கிலி போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
வைகோ தலைமையில் நடைபெற்ற போராட்டம் பெரும் கலவரத்தில் முடிந்துள்ளதால், தேமுதிக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அஹிம்சை வழியில் மனித சங்கிலி போராட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளது.