வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : வியாழன், 28 மே 2015 (02:29 IST)

மோசடி வழக்கில் விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ்

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மைத்துனர் சுதீஷ், பண மோசடி வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
 
ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த மாரியம்மாள் என்பவர் கடந்த 2001 ஆம் ஆண்டு விஜயகாந்த் நடித்த நரசிம்மா படத்திற்கு, நெல்லை மாவட்ட விநியோக உரிமை பெற்றார்.
 
இதில், இவருக்கும் தயாரிப்பாளர்கள் விஜயகாந்த் மற்றும் சுதீஷ் ஆகியோருக்கும் ரூ.55 லட்சத்திற்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. 
 
இந்த ஒப்பந்தப்படி நஷ்டம் ஏற்பட்டால் தயாரிப்பாளர் பணம் தர வேண்டும். ஆனால் நெல்லை மாவட்டத்தில் ரூ.29 லட்சத்திற்கு மட்டுமே வியாபாரம் நடைபெற்றுள்ளதால், இதில் ரூ.26 லட்சம் மாரியம்மாளுக்கு நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 
 
இதனால், நஷ்டமான பணத்தை விஜயகாந்த் மற்றும் சுதீஷ் ஆகியோரிடம் மாரியம்மாள் திரும்பக் கேட்டுள்ளார். ஆனால், அவர்கள் பணம் தர மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
 
இதனால், இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில், விஜயகாந்த் மற்றும் அவரது மைத்துனர் சுதீஷ் மீது மாரியம்மாள் வழக்கு தாக்கல் செய்தார். 
 
இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி விஜயகாந்த், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அம்மனுவை விசாரித்த நீதிமன்றம் விஜகாந்தை இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்தது.
 
இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்று வரும் இந்த வழக்கில், சுதீஷ் விசாரணைக்கு ஆஜராகாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதனால், நீதிமன்றம் இவருக்கு ஏப்ரல் 10 ஆம்  தேதி பிடிவாரண்ட் பிறப்பித்தது. 
 
இதனையடுத்து, நீதிபதி பசும்பொன் சண்முகையா முன்னிலையில் சுதீஷ் ஆஜராகி, பிடிவாரண்ட்டை ரத்து செய்யக் கோரினார். மேலும், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கு விசாரணையை ஜூன் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்திரவிட்டார்.