1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : வெள்ளி, 28 ஆகஸ்ட் 2015 (03:19 IST)

மதுரையில் மிளிரும் மனித நேயம்: குழந்தைகளுக்கு இலவச பால்

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் உள்ள ஒரு டீக்கடையில், கைக்குழந்தைகளுக்கு கலப்படம் இல்லாத பால் இலவசமாக வழங்கப்படுகிறது.

\

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் உள்ள ஒரு டீக்கடை முன்பு உள்ள ஒரு போர்டில், வெளியூரில் இருந்து கைகுழந்தையுடன் வரும் தாய்மார்களுக்கு தரமான பால் இலவசமாக வழங்கபடும். இப்படிக்கு குணா சுரேஷ் என எழுதப்பட்டுள்ளது.
 
இந்த இலவச பால் கொடுப்பது குறித்து, அந்தக் கடை உரிமையாளரிடம் கேட்ட போது, எனக்கு சொந்த ஊர் அருப்புகோட்டை பக்கம். தற்போது, மதுரையில் குடும்பத்துடன் வசிக்கிறேன்.
 
கடந்த சில வருடம் முன்பு, எனது தம்பியின் மனைவி கைக்குழந்தை பாலுக்காக அழுந்துள்ளது. அப்போது, அவர், தனது கைக்குழந்தையுடன், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நள்ளிரவில் பாலுக்கு அலைந்துள்ளார். பால் கிடைக்கவில்லை. குழந்தை பசிக்கு ஏங்கி மேலும் மேலும் அழுதுள்ளது.
 
குழந்தையின் பசியைப் போக்க, ஒரு டீக்கடையில் பால் வாங்கி கொடுத்துள்ளார். அதை குடித்த கொஞ்ச நேரத்தில் அந்த குழந்தைக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. காரணம், கலப்பட  பால் தான். இந்த சம்பவம் தான் என் மனதில் மிகுந்த வலியை ஏற்படுத்தியது. எனவே தான், கைக்குழந்தைகளோடு வரும் தாய்மார்களுக்கு மட்டும் கலப்படம் இல்லாத நல்ல பாலை இலவசமாக வழங்குறேன் என்றார். 

கடந்த சில வருடங்களாகவே இவர் இந்த சேவையை பல சோதனைக்களுக்கு மத்தியில் செய்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.

இவரது இந்த மனிதநேய சேவையை மதுரை மாவட்ட கலெக்டர், மதுரை மேயர் என பலரும் பாராட்டியுள்ளனர். அந்த நல்ல உள்ளத்தை நாமும் பாராட்டுவோம்.