1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : திங்கள், 2 ஜனவரி 2017 (22:08 IST)

ஜோதிமணி மட்டும் ஆபாசமாக நடந்து கொள்ளலாமா? - சீறும் பாஜக இளைஞரணி

நாட்டு மக்கள் தேர்வு செய்த ஒரு பிரதமரைத் தூக்கில் தொங்கு, தீயால் எரிபட்டு சாவு என்று சொல்வதெல்லாம் எவ்வகையான நாகரிகம் என்று பாஜக மாநில இளைஞரணி துணைத் தலைவர் சூர்யா கூறியுள்ளார்.


 

தமிழக காங்கிரஸ் இயக்கத்தில் குறிப்பிடத்தகுந்தவரான ஜோதிமணி எதிராக சிலர் ஒன்றிணைந்து ஆபாச வாட்ஸ் அப் குழு ஒன்றைத் தொடங்கி, அவர் குறித்த வக்கிரக் கருத்துகளைத் தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர்.

அதற்கு எதிராக சமூக வலைத்தளமான முகநூலில் பிரதமர் நரேந்திர மோடி, பிஜேபியின் தலைவர் அமித் ஷா, தமிழக பிஜேபியின் தலைவர் சகோதரி தமிழிசை சௌந்திரராஜன் ஆகியோருக்கு ஒரு திறந்த அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் ஜோதிமணி அறிக்கைக்கு பாஜக மாநில இளைஞரணி துணைத் தலைவர் சூர்யா கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கூறியுள்ள சூர்யா, ”ஜோதிமணியை இழிவு வார்த்தைகளால் பேசிய அனைவரையும் வன்மையாகக் கண்டிக்கிறேன். இது எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய செயல் இல்லை.

மதிப்பிற்குரிய நரேந்திர மோடி என்று தனது கடிதத்தைத் தொடங்கி இருக்கும் ஜோதிமணி, டிசம்பர் 29-ஆம் தேதி 'ஒரு பிரதமர் தூக்கில் தொங்குவதும், உயிரோடு எரிக்கப்படுவதும் நாட்டுக்கு அவமானம். சட்டப்படி குற்றம். மானஸ்தன் வேறு! ராஜினமா செய்யட்டும்' என்று ஆங்கிலத்தில் பதிவிட்டு இருந்தார் .

இந்த பதிவுக்கு ஜோதிமணியை ஆதரிக்கும் பலரும் கூட (காங்கிரஸ்காரர்கள் உட்பட) முகநூலிலும், ட்விட்டரிலும் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். நாட்டு மக்கள் தேர்வு செய்த ஒரு பிரதமரைத் தூக்கில் தொங்கு, தீயால் எரிபட்டு சாவு என்று சொல்வதெல்லாம் எவ்வகையான நாகரிகம்?

இப்படி ஓர் அநாகரிக பதிவை செய்தால் பிரதமர் மோடி ஆதரவாளர்கள் நிச்சயம் ஏதேனும் எதிர்வினை செய்வர்; அதை பயன்படுத்த வேண்டும் என்பதே ஜோதிமணியின் திட்டம். துரதிர்ஷ்டவசமாக அந்த திட்டம் தற்போது நிறைவேறி இருக்கிறது.

ஜோதிமணியை தரக்குறைவாக விமர்சிப்பவர்களை கண்டிக்கும் அதே வேளையில், பொய் மற்றும் அநாகரிகக் கருத்துகளை மையமாக வைத்து அரசியல் செய்யும் ஜோதிமணியையும் நிச்சயம் கண்டிக்கிறேன். ஜோதிமணி முதலில், தான் நாகரீகமாக நடந்துக்கொண்டு மற்றவர்களிடம் நாகரீகத்தை எதிர்பார்க்கட்டும்'' என்று பதலளித்துள்ளார்.