1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : செவ்வாய், 25 ஏப்ரல் 2017 (12:02 IST)

தினகரனிடம் தொடர் விசாரணை - டெல்லியில் என்ன நடக்கிறது?

இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்ததாக, அதிமுக துணைப் பொதுச்செயலாளர் தினகரன் மீது வழக்குப்பதிவு செய்துள்ள டெல்லி போலீசார், அவரிடம் கடந்த 4 நாட்களாக விசாரணை செய்து கொண்டிருக்கிறார்கள்.


 

 
தேர்தல் கமிஷனால் முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை மீட்க ரூ.60 கோடி பேரம் பேசியதாக, தினகரன் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக சுகேஷ் சந்திரசேகர் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் செய்த விசாரணையை அடுத்து, தினகரனிடம் விசாரணை நடத்த முடிவு செய்த போலீசார் அவருக்கு அளித்த சம்மனை அடுத்து, கடந்த 22ம் தேதி அவர் டெல்லிக்கு சென்றார்.  
 
3 நாட்கள் விசாரணைக்கு பின்னும், தினகரனிடமிருந்து தெளிவான பதிலை டெல்லி போலீசாரால் பெற முடியவில்லை. தினகரன் தரப்பு சுகேஷ் சந்திரசேகருக்கு அனுப்பிய குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்), தொலைபேசி அழைப்பு உள்ளிட்ட ஆதாரங்களை வைத்தும் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். ஆனால், பெரும்பாலான கேள்விகளுக்கு, இல்லை, தெரியாது, இம்பாசிபிள் என ஒற்றை வார்த்தைகளிலேயே தினகரன் பதில் அளித்துள்ளார். சில கேள்விகளுக்கு எந்த பதிலும் கூறாமல் மௌனமாய் இருக்கிறார். மேலும், யாகேஷ் ஒரு நீதிபதி என நினைத்து பேசினேன் என அவர் கூறியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. 


 

 
ஆனால், சுகேஷிடம் அவர் பேசிய ஆதாரங்கள், அவரது ஆட்கள் தொடர்பு கொண்ட ஆதாரங்கள் போலீசாரிடம் சிக்கியுள்ளதாக தெரிகிறது. எனவே, சுகேஷ்,  தினகரன், தினகரனின் உதவியாளர், சுகேஷை தினகரனுக்கு அறிமுகம் செய்து வைத்த இடைத்தரகர், என ஓவ்வொரு நபரிடமும் தனித்தனியாக போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
 
ரூ.1.30 கோடி எந்த  வகையில் சுகேஷிற்கு கைமாற்றப்பட்டது. பணத்தை கொண்டு வந்தது யார், யாகேஷிடம் கொடுத்தது யார் என அனைத்து விபரங்களும் தற்போது போலீசார் வசம் இருப்பதாக தெரிகிறது. எனவே, இதுகுறித்து தினகரனிடம் கேட்க 100 கேள்விகள் போலீசார் தயாராக வைத்திருந்தனர். ஆனால் அவர் தொடர்ந்து மழுப்பலான பதிலையே கூறி வருவதாக தெரிகிறது. 
 
எனவேதான், 4வது நாளாக இன்று மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என தினகரனுக்கு போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.  தினகரன் மாலை 5 மணிக்கும், அவரது வழக்கறிஞர் குமார் காலை 11 மணிக்கும், தினகரனின் நண்பர் மல்லிகார்ஜூனா, உதவியாளர் ஜனார்தனன் ஆகியோர் இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆஜராக வேண்டும் என போலீசார் உத்தரவிட்டுள்ளனர். 
 
இன்றும் தினகரன் மழுப்பிய படியே பதிலளித்தால் அவர் கைது செய்து விசாரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.