வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: புதன், 19 ஏப்ரல் 2017 (16:12 IST)

அடி மேல் அடி ; தினகரனை விசாரிக்க டெல்லி போலீசார் இன்று வருகை

இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்ததாக எழுந்த புகார் குறித்து தினகரனிடம் விசாரணை செய்ய டெல்லி போலீசார் இன்று மாலை சென்னை வருகிறார்கள்.


 

 
அதிமுக சின்னமான இரட்டை இலை சின்னத்தை பெற டெல்லியை சேர்ந்த சுகேஷ் சந்தர் என்பவரிடம் தினகரன் ரூ.60 கோடி பேரம் பேசி, ரூ.10 கோடியை முன்பணமாக கொடுத்தார் என டெல்லி போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். மேலும், சுகேஷ் சந்தரை நேற்று முன் தினம் அதிகாலை போலீசார் கைது செய்ததோடு, அவரிடமிருந்து ரூ.1 கோடி 30 லட்சம் பணத்தையும் கைப்பற்றியுள்ளனர். மீதி பணம் ரூ. 8 கோடியே ரூ.70 லட்சம் எங்கே இருக்கிறது என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், இதில் தினகரனுக்கு எதிரான வலுவாக ஆதாரங்களை அவர்கள் சேகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது. 
 
சுகேஷ் சந்தரை 8 நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகிறது.
 
இந்நிலையில், இது தொடர்பாக விசாரணை செய்வதற்காக கடந்த 17ம் தேதி டெல்லி போலீசார் சென்னை வருவதாக இருந்தது. அதிகாரிகளுக்காக விமான டிக்கெட்டும் முன்பதிவு செய்யப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் அது ரத்து செய்யப்பட்டது. யாகேஷ் சந்தரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதால், அவரிடமிருந்து பல்வேறு தகவல்களை திரட்டிய பின் சென்னை வருவது பற்றி டெல்லி போலீசார் முடிவெடுப்பார்கள் எனக் கூறப்பட்டது.
 
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து தினகரனிடம் விசாரணை செய்ய இன்று மலை 5.15 மணியளவில், டெல்லியில் இருந்து விமானம் மூலம் டெல்லி போலீசார் சென்னை வருவது உறுதியாகியுள்ளது.
 
இன்றைய நாள் தினகரனுக்கு சரியாக அமையவில்லை. நேற்று இரவு அமைச்சர்கள் எடுத்த அதிரடி முடிவால், அதிமுகவிலிருந்து விலக வேண்டியிருந்தது, மேலும், அந்நிய செலவாணி வழக்கில் இன்று மாலை 3 மணியளவில் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார். அதையடுத்து இன்று மாலை டெல்லி போலீசாரின் விசாரணையை அவர் சந்திக்கவுள்ளார். 
 
இப்படி ஒரே நாளில்  தொடர் சோதனைகளை சந்தித்து வருகிறார் தினகரன்.