வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : திங்கள், 18 ஜனவரி 2016 (23:02 IST)

ஜெயலலிதா தொடர்ந்த அவதூறு வழக்கு: உயர் நீதிமன்றத்தில் கருணாநிதி நேரில் ஆஜர்

அவதூறு வழக்கு: நீதிமன்றத்தில் கருணாநிதி நேரில் ஆஜர்

ஜெயலலிதா தொடர்ந்த அவதூறு வழக்கில் கருணாநிதி இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். இதனால் நீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


 

 
"4 ஆண்டுகளில் ஜெயலலிதா சாதித்தது என்ன?" என்ற தலைப்பில் ஆனந்த விகடன் வார இதழில் கடந்த நவம்பர் மாதம் ஒரு கட்டுரை வெளியிட்டது.
 
இந்த கட்டுரையை முரசொலி நாளிதழில் வெளியிட்டு, திமுக தலைவர் கருணாநிதி கட்டுரை ஒன்றை எழுதினார்.
 
இதையடுத்து, முரசொலி பத்திரிகையின் ஆசிரியர் முரசொலி செல்வம், கட்டுரை எழுதிய கருணாநிதி ஆகியோர் மீது, சென்னை மாவட்ட முதன்மை செசன்சு நீதிமன்றத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
 
இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட மாவட்ட முதன்மை நீதிபதி ஆதிநாதன், வழக்கு ஆவணங்களை ஜனவரி 18 ஆம் தேதி நேரில் ஆஜராகி பெற்றுக் கொள்ளவேண்டும் என்று கருணாநிதிக்கும், முரசொலி செல்வத்துக்கும் சம்மன் அனுப்பி உத்தரவிட்டார்.
 
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு தடை உத்தரவு பெறவேண்டாம் என்றும் வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜக இருப்பதாகவும், கருணாநிதி அறிவித்தார். அதன்படி இன்று காலை அவர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
 
கருணாநிதியின் வருகையை ஒட்டி, வழக்கு தொடர்பானவர்கள் மட்டுமே நீதிமன்ற வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
 
மேலும், நீதிமன்ற வளாகத்திற்குள் தொண்டர்களை காவல்துறையினர் அனுமதிக்க மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அத்துடன், தொண்டர்களை கட்டுப்படுத்த நீதிமன்ற நுழைவு வாயில்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையினர் மேற்கொண்டிருந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு மார்ச் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.