1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 6 ஆகஸ்ட் 2018 (14:10 IST)

கருணாநிதிக்கு என்ன ஆச்சு? - தயாளு அம்மாள் மருத்துவமனைக்கு வருகை

திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டிருக்கும் காவேரி மருத்துவமனைக்கு அவரது மனைவி தாயாளு அம்மாள் மற்றும் மு.க.தமிழரசு ஆகியோர் வந்துள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
கடந்த ஒரு 10 நாட்களாக கருணாநிதிக்கு காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வயோதிகம், நுரையீரல் தொற்று, கல்லீரல் பாதிப்பு, சிறுநீரக தொற்று, இரத்தத்தில் தொற்று என பல நோய்களால் அவர் அவதிப்பட்டு வருகிறார். எனினும், அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதால் அவரது உடல்நிலை சீரான நிலையில் இருந்து வருகிறது. 
 
இன்று காலை ஸ்டாலின் உள்ளிட்ட கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் பெரும்பாலனோர் மருத்துவமனைக்கு வந்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாகவும், மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் செய்திகள் கசிந்துள்ளது. 
 
இந்நிலையில், தற்போது கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் காவேரி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். அவரை கருணாநிதியின் மூத்த மகன் தமிழரசு கோபாலபுரம் இல்லத்திலிருந்து அழைத்து வந்தார். 

ஏற்கனவே கருணாநிதியின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், கடந்த 10 நாட்களாக மருத்துவமனைக்கு வராத தயாளு அம்மாள் அங்கு அழைத்து வரப்பட்ட விவகாரம் திமுக தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று காலை கும்பகோணம் சென்றிருந்த மு.க.ஸ்டாலினின் மறுமகன் சபரீசனும் கருணாநிதியின் உடல்நிலை கேட்டு அவசரமாக சென்னை திரும்பிக்கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.