வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 13 ஆகஸ்ட் 2014 (06:02 IST)

மத்திய மாநில அரசுகளை எதிர்த்து, இந்தியக் கம்யூனிஸ்டுகள் போராட்டம்

மத்திய அரசையும் மாநில அரசையும் கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து போராட்டங்களை நடத்தப்போபவதாக அறிவித்துள்ளன.

தற்போதைய நரேந்திர மோதி தலைமையிலான பாரதீய ஜனதாக் கட்சி அரசு முந்தைய மன்மோகன் சிங் தலைமையிலான அரசு பின்பற்றிய அதே தாராளமயக் கொள்கையைப் பின்பற்றுவதை எதிர்த்தும், அதே போன்ற கொள்கைகளையே தமிழக அரசும் பின்பற்றி வருவதை எதிர்த்தும் தமிழ்நாடு முழுவதும் கிராமங்களிலும் நகரங்களிலும் பல்லாயிரக்கணக்கான குழுக்களின் மூலம் மக்களைப் பெருமளவில் சந்தித்து விளக்கப்போவதாக சிபிஐ - சிபிஎம் கட்சிகள் அறிவித்துள்ளன.
 
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா. பாண்டியனும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணனும் இன்று கூட்டாக பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். இந்தச் சந்திப்பின்போது, மத்திய - மத்திய மாநில அரசுகளை எதிர்த்து நடத்தும் போராட்டம் குறித்த அறிவிப்பை இவர்கள் வெளியிட்டனர்.
 
போராட்டத் தேதிகள்
 
ஆகஸ்ட் 25ஆம் தேதி முதல் 31ஆம் தேதிவரை இந்த இரண்டு கட்சிகளையும் சேர்ந்த ஆயிரக்கணக்கான குழுக்கள் கிராமங்களிலும் நகரங்களிலும் மக்களைச் சந்தித்து, மத்திய மாநில அரசுகளின் செயல்பாடுகள் குறித்து விளக்கப்போவதாக இவர்கள் அறிவித்தனர்.
 
இது தவிர, செப்டம்பர் ஒன்றாம் தேதியன்று, தமிழகத்தின் எல்லா மாவட்டத் தலைநகரங்களிலும் உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்துவதாகவும் இந்தக் கட்சிகள் அறிவித்துள்ளன. சென்னையில் நடக்கும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஜி. ராமகிருஷ்ணன், தா. பாண்டியன் ஆகிய இருவரும் கலந்துகொள்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.
 
இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ஜி. ராமகிருஷ்ணன், தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் சட்டம் ஒழுங்கில் முன்னேற்றமில்லை என்றும் குற்றம் சாட்டினார். பெண்கள், குழந்தைகள், தலித்துகள் மீதான குற்றங்கள் அதிகரித்திருப்பதாகவும் அவர் கூறினார்.
 
அழைப்பு
 
தமிழகத்தில் ஆளும் கட்சி வலுவானதாக இருக்கும்போது, எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்படாதது ஏன் என கேட்டபோது, பதிலளித்த தா. பாண்டியன், கொள்கைகளின் அடிப்படையில் மட்டுமே இணைந்து செயல்பட முடியுமென்றும், தங்கள் கொள்கைகளை ஏற்பவர்கள் தங்களுடன் சேர்ந்துகொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.
 
சி.பி.ஐ. -சி.பிஎம். கட்சிகள் தொடர்ந்து இணைந்து செயல்பட்டுவருவதாகவும் சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து இப்போது பேச முடியாது என்றும் இந்தத் தலைவர்கள் தெரிவித்தனர்.