வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: செவ்வாய், 16 மே 2017 (17:05 IST)

போக்குவரத்து ஊழியர்கள் பணிக்கு திரும்ப உத்தரவு: எஸ்மா சட்டத்தை பயன்படுத்த நீதிமன்றம் அறிவுறுத்தல்!

போக்குவரத்து ஊழியர்கள் பணிக்கு திரும்ப உத்தரவு: எஸ்மா சட்டத்தை பயன்படுத்த நீதிமன்றம் அறிவுறுத்தல்!

தமிழக போக்குவரத்து ஊழியர்கள் நேற்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து அவர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.


 
 
தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருடன் நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததையடுத்து திட்டமிட்டபடி நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கினர் போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர்.
 
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 7000 கோடி ரூபாய் நிலுவைத்தொகையாக உள்ளது. இந்த நிலுவைத்தொகை, பஞ்சப்படி, பணி நிரந்தரம், ஊதிய உயர்வு போன்றவற்றை பல காலமாக வழங்காமல் இருப்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து சங்கங்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் மே 15-ஆம் தேதி முதல் ஈடுபட போவதாக அறிவித்திருந்தது.
 
இதனையடுத்து 6 கட்டங்களாக தமிழக அரசு போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தைகளில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ரூ.750 கோடி நிலுவைத் தொகை வழங்க ஒப்புதல் அளித்தார். மேலும் அமைச்சர் விஜயபாஸ்கர் ரூ.500 கோடி வழங்க ஒப்புதல் அளித்தார்.
 
இதனால் போக்குவரத்து சங்கங்கள் கடும் அதிருப்தியடைந்தனர். 7000 கோடி ரூபாய்க்கு பதிலாக வெறும் 1200 கோடி ரூபாய் மட்டுமே வழங்க ஒப்புதல் அளித்திருப்பது அவர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. இதனையடுத்து திட்டமிட்டபடி நேற்று முதல் போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை தொடங்கினர்.
 
இதனால் தமிழகம் முழுவதும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. அரசு சில முயற்சிகளை மேற்கொண்டு போருந்துகளை இயக்க முயற்சித்தது. ஆனால் 90 சதவீத பேருந்துகள் இயக்கப்படவில்லை என்றே கூறப்பட்டது. இதனால் தமிழகம் முழுவதும் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
 
இந்நிலையில் இந்த வேலை நிறுத்தத்தை எதிர்த்து செந்தில்குமரய்யா என்ற நபர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் முரளிதரன் மற்றும் சேஷய்யா ஆகியோர் அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கினர்.
 
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும். அப்படி வேலைக்கு திரும்பாதவர்கள் மீது எஸ்மா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
 
தொழிலாளர்கள் பணிக்கு திரும்பியதை உறுதிபடுத்த தலைமை செயலாளருக்கும் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. பணிக்கு திரும்பியதை அறிக்கையாக நாளை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
 
போக்குவரத்து ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் இல்லையென்றால் அவர்கள் மீது எஸ்மா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நீதிமன்றத்தின் உத்தரவை உடனடியாக அனைத்து பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகள் வெளியிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.