வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 7 டிசம்பர் 2017 (19:35 IST)

டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

 
வேட்பு மனு தாக்கல், வாபஸ் ஆகியவை முடிந்து, தற்போது ஆர்.கே.நகர் தேர்தலுக்கு சின்னம் ஒதுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில், சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் டிடிவி தினகரன் தனக்கு தொப்பி சின்னம் வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்திருந்தார். ஆனால் இதே சின்னத்தை மேலும் 29 பேர் கேட்டுள்ளதால் தினகரனுக்கு தொப்பி கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்தது. ஒரு சின்னத்தை பல சுயேட்சை வேட்பாளர்கள் கேட்டால், குலுக்கல் முறைப்படி சின்னம் ஒதுக்கப்படும்.
 
அந்நிலையில், தினகரனுக்கு புதிய சிக்கல் ஒன்று ஏற்பட்டது. அதாவது, கொங்கு முன்னேற்ற கழகம், தேசிய மக்கள் சக்தி, எழுச்சி தமிழர்கள் முன்னேற்ற கழகம் ஆகிய மூன்று கட்சிகளும் தங்களுக்கு தொப்பி சின்னம் ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தது. தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு சின்னத்தை ஒதுக்குவதில் முன்னுரிமை அளிக்கப்படும் என தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்துவிட்ட நிலையில், தினகரனுக்கு தொப்பி சின்னம் கிடைக்க வாய்ப்பில்லை எனக்கூறப்பட்டது.
 
அதுபோலவே, தற்போது தொப்பி சின்னம் வேண்டும் என்ற கோரிக்கையை தேர்தல் அதிகாரி நிராகரித்தார். மேலும் தொப்பி சின்னம் கொங்கு முன்னேற்ற கழக வேட்பாளருக்கு வழங்கப்பட்டது. மேலும் தினகரன் கோரியிருந்த தொப்பி, விசில், கிரிக்கெட் மட்டை ஆகிய மூன்று சின்னமும் மற்றவர்களுக்கு வழங்கப்பட்டதால், டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கப்பட்டுள்ளது.
 
வேறுவழியில்லாமல் தற்போது டிடிவி தினகரன் தற்போது ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிடுகிறார்.