1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 19 ஏப்ரல் 2024 (16:20 IST)

VOTE 4 INDIA என பதிவிட்டதால் சர்ச்சை..! குழப்பத்தை உண்டாக்க முயற்சி என குஷ்பு விளக்கம்.!

Kushpu
மக்களவை தேர்தலில் இந்தியாவுக்கு ஓட்டுப் போடுங்கள் எனக் குறிப்பிட்டு தனது சமூக வலைதள பக்கத்தில் பாஜக நிர்வாகியும் நடிகையுமான குஷ்பு வெளியிட்டுள்ள பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குழப்பத்தை உண்டாக்கும் முயற்சி என குஷ்பு விமர்சித்துள்ளார்.
 
தமிழகத்தில் மக்களவை தேர்தல் வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. காலை முதலே அரசியல் கட்சித் தலைவர்களும் திரையுலக பிரமுகர்களும் வாக்குச்சாவடி சென்று வாக்கு செலுத்தி வருகின்றனர்.
 
அந்தவகையில், சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடி மையத்துக்கு நடிகை குஷ்பு தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார். அதன்பின், அங்கிருந்தபடியே குடும்பத்தினருடன் செல்பி எடுத்து தனது எக்ஸ் பக்கத்தில் அந்தப் புகைப்படங்களை பகிர்ந்தார்.
 
அதில், #Vote4india என அவர் பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதே ஹேஸ்டேகை கடந்த சில வாரங்களாக இண்டியா கூட்டணிக் கட்சியினர் பயன்படுத்தி வந்தனர். அப்படியிருக்கும் போது, குஷ்புவின் பதிவு தற்போது வைரலாகி வருகிறது. அவரின் பதிவுக்கு தி.மு.க., காங்கிரஸ் ஆதரவாளர்கள் ஆதரவு தெரிவித்து வருவது பாஜகவினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
 
இது குறித்து விளக்கம் அளித்துள்ள நடிகை குஷ்பு, நான் எதைச் செய்தாலும் அதை பிரச்னையாக்க வேண்டும் எனக் காத்திருக்கிறார்களா என கேள்வி எழுப்பி உள்ளார். இந்தியா என்பது நமது நாடு தானே என்றும் இதற்கு முன்பு பதிவிடும்போதெல்லாம் இப்படிப்பட்ட பிரச்னைகள் எதுவும் வரவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
 
எதிர்க்கட்சி கூட்டணியின் பெயர் இண்டியா. அதில் ஒவ்வொரு எழுத்துக்கும் இடையில் புள்ளி இருக்கும். நான் பதிவிட்டதில் புள்ளி இல்லையே? என நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். நான் எதைச் செய்தாலும்  குழப்பத்தை உண்டாக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள், ஆனால், நான் தெளிவாக இருக்கிறேன் என்றும் நான் பா.ஜ.,வில் இருக்கிறேன் என்றும் என்னுடைய சமூகவலைதள பக்கத்தில் 'மோடி பரிவார்' என இருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

 
இதைப் பார்த்துவிட்டு சற்று அறிவுடன் செயல்பட வேண்டும் என்றும் இண்டியா என்ற பெயரை மக்களை ஏமாற்றுவதற்காக எதிர்க்கட்சிகள் வைத்துள்ளார்களா? என்றும் நடிகை குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்