1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வெள்ளி, 10 மார்ச் 2017 (16:46 IST)

ஈஷா யோக மைய தீர்த்த குளத்தில் கல்லூரி மாணவர் பலி..

வெள்ளையங்கிரி மலையில் அமைந்துள்ள ஈஷா யோகா மையத்தில் உள்ள தீர்த்த குண்டத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் பலியான விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த மன்னார்சாமி என்பவரின் மகன் ரமேஷ்(21). இவர் வேலூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். அந்நிலையில், அவர் தன்னுடைய கல்லூரி மாணவர்களுடன் ஊட்டிக்கு சுற்றுலா சென்றுள்ளார். அப்போது, போகும் வழியில் உள்ள வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் அமைந்திருக்கும் ஈஷா யோகா மையத்திற்கு அவர்கள் இன்று காலை சென்றுள்ளனர். அங்கே நுழைந்தவுடன், ஒரு தீர்த்த குண்டம் ஒன்று உள்ளது. அங்கு வருபவர்கள் முதலில் அதில் குளித்து விட்டுதான் உள்ளே செல்வதால், அவர்கள் அதில் குளித்துள்ளனர். 

ரமேஷும் அதில் குளித்துள்ளார். காலை நேரம் என்பதால் தண்ணீர் மிகவும் குளிராக இருந்துள்ளது. எனவே, அதை தாங்க முடியாமல் ரமேஷ் சிரமப்பட்டுள்ளார். 3 முறை மூழ்கி எழ வேண்டும் எனக் கூறப்பட்டதால், அதேபோல் மூழ்கி எழுந்த அவர் குளிர் தாங்க முடியாமல் சிரமப்பட்டுள்ளார். எனவே, அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளித்தனர். அதன் பின் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் செல்லும் வழியிலேயே அவர் மரணமடைந்தார்.
 
இதுகுறித்து விளக்கம் அளித்த ஈஷா நிர்வாகிகள், குளத்தில் குளித்துக் கொண்டிருக்கும் போது அந்த மாணவருக்கு வலிப்பு ஏற்பட்டது. உடனே அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம். ஆனாலும் அவர் இறந்துவிட்டார். இதய நோய், வலிப்பு நோய் உள்ளவர்கள் குண்டத்தில் இறங்க வேண்டாம் என கூறியுள்ளோம். ஆனால், அதை பொருட்படுத்தாமல் அந்த மாணவர் குளத்தில் இறங்கி, மூச்சு விட சிரமமப்பட்டு இறந்துள்ளார்” எனத் தெரிவித்தனர்.
 
ஆனால், ரமேஷிற்கு எந்த உடல் நலக்குறைவும் இல்லை. அவன் திடீரெனெ மயங்கி விட்டான். நாங்கள் அவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். ஆனால் அவன் இறந்துவிட்டான் என ரமேஷின் நண்பர்கள் கூறியுள்ளனர்.

ஈஷா யோக மையம் முறைகேடாக நிலங்களை கையகப்படுத்தி, அங்கே ஆசிரமம் அமைத்துள்ளது என சமீபத்தில்தான் சர்ச்சை எழுந்தது. இந்நிலையில், கல்லூரி மாணவர் அங்கு பலியான விவகாரம் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.