1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : வெள்ளி, 28 ஆகஸ்ட் 2015 (13:31 IST)

தாலி கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்த பெண்: பரபரப்பு வாக்குமூலம்

திருவேற்காட்டில் தனது கணவரை 2 ஆவது திருமணம் செய்துகொண்ட கல்லூரி பேராசிரியையை தாலி கயிற்றால் இறுக்கி கொலை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர்.
 
சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். 36 வயதான இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ராஜலட்சுமி, இவர் ஒரு தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியையாக வேலை செய்துவந்தார். 
 
திருவேற்காட்டை அடுத்துள்ள வி.ஜி.என். மகாலட்சுமி நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சாம்பசிவ ராவ். இவர் பூந்தமல்லியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சுருதி, இவர்களுக்கு சேஜல் என்ற மகளும், சுசீல் என்ற மகனும் உள்ளனர். 
 
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர், ராஜலட்சுமிக்கும் அவரது கணவருக்கும் தகராறு ஏற்பட்டதால் கோபித்துக் கொண்டு வீட்டைவிட்டு வெளியேறிய ராஜலட்சுமி, நண்பரான சாம்பசிவ ராவ் வீட்டிற்கு வந்து தங்கினார்.
 
சாம்பசிவராவ் வேலைக்கு சென்ற பிறகு, வீட்டில் தங்கியிருந்த ராஜலட்சுமி குளியலறையில் வழுக்கி விழுந்து உடலில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கி கிடப்பதாக கூறி சுருதி சத்தம்போட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து மயங்கிய நிலையில் இருந்த ராஜலட்சுமியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
 
மருத்துவமனையில், பரிசோதனை செய்த மருத்துவர்கள் ராஜலட்சுமி ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இது குறித்து திருவேற்காடு காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
 
இதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், ராஜலட்சுமியின் உடலை ராஜலட்சுமியின் உடல் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
 
இது குறித்து சுருதியிடம் காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டதில், அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார். இதனால் காவல்துறையினர் அவர் மீது சந்தேகமடைந்தனர். 
 
இந்நிலையில், ராஜலட்சுமி பலமாக தாக்கப்பட்டும், கழுத்து இறுக்கப்பட்டும் கொலை செய்யப்பட்டிருப்பதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, சுருதி மீது சந்தேத்தில் இருந்த காவல்துறையினர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். 
 
இந்த விசாரணையில், தனது கணவர் கள்ளக்காதலியை 2 ஆம் திருமணம் செய்துகொண்டு வீட்டிற்கே அழைத்து வந்ததால் அந்த பெண்ணை அடித்து, தாலி கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்ததாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து சுருதியை கைது செய்தனர்.
 
இந்த சம்பவம் குறித்து சுருதி காவல்துறையினரிடம் கூறிய வாக்குமூலம் வருமாறு:-
 
எனது கணவர் சாம்பசிவராவ் பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை செய்து வருகிறார். எங்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.
 
சந்தோஷமாக சென்ற எங்களது வாழ்க்கையில் புயல்போல் வந்தவள் ராஜலட்சுமி..
மேலும் அடுத்தப் பக்கம் பார்க்க...
தனது முதல் கணவரை பிரிந்து வாழ்ந்துவந்த ராஜலட்சுமி, எனது கணவர் வேலைபார்க்கும் அதே கல்லூரியில்தான் முதலில் வேலைபார்த்தார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே கள்ளக் காதல் ஏற்பட்டுள்ளது. 
 
இதற்கிடையில் ராஜலட்சுமி தனது உறவினரான சுரேஷ் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து, தான் பணிபுரிந்த கல்லூரியை விட்டு, சென்னையில் உள்ள வேறொரு கல்லூரியில் உதவி பேராசிரியையாக வேலைக்கு சேர்ந்தார்.
 
ஆனால் எனது கணவருக்கும், அவருக்கும் இடையே இருந்த கள்ளத்தொடர்பு மேலும் அதிகரிக்க ஆரம்பித்தது. இந்த தகவல் சுரேசுக்கு தெரிந்தவுடன் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
 
இதனால் எனது கணவர் சாம்பசிவ ராவ், ராஜலட்சுமியை திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தார். இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிகிறது. கடந்த 3 தினங்களுக்கு முன்பு ராஜலட்சுமியை வீட்டிற்கு அழைத்துவந்த சாம்பசிவ ராவ் என்னிடம், "உன்னுடன் வாழ எனக்கு பிடிக்கவில்லை. இவளுடன் தான் இனி வாழப்போகிறேன். நீ என்னை விட்டு ஒதுங்கிவிடு அல்லது விவாகரத்து பெற்றுக்கொண்டு என்னை விட்டு சென்றுவிடு" என்று கூறி மிரட்டினார்.
 
ஒரே வீட்டில் என்னுடனும், கள்ளக் காதலியுடனும் சாம்பசிவ ராவ் குடும்பம் நடத்தியதால், எனது வாழ்க்கையை பங்குபோட வந்த ராஜலட்சுமி மீது ஆத்திரம் அடைந்தேன். ராஜலட்சுமியை எப்படியாவது விரட்ட வேண்டும் என்று திட்டம் தீட்டினேன்.
 
நேற்று முன்தினம் சாம்பசிவராவ் வேலைக்கு சென்றவுடன் எனக்கும் ராஜலட்சுமிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் குளியலறைக்கு சென்ற ராஜலட்சுமியை பின் தொடர்ந்து நானும் சென்று அவரை சரமாரியாக தாக்கினேன்.
 
இதில் ராஜலட்சுமியின் கண், முகம், தலை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. ஆனாலும் ஆத்திரம் அடங்காத நான் ராஜலட்சுமியின் முதுகில் ஏறி அமர்ந்து கொண்டு அவரது கழுத்தில் அணிந்திருந்த தாலி கயிற்றால் கழுத்தை இறுக்கினேன். 
 
இதில் மூச்சுத்திணறி ராஜலட்சுமி அந்த இடத்திலேயே இறந்துபோனார். ராஜலட்சுமி பாத்ரூமில் வழுக்கி விழுந்து இறந்ததுபோல் இருக்க வேண்டும் என்று கொலையை மறைக்க முயற்சி செய்தேன். இவ்வாறு சுருதி அந்த வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.