சனி, 21 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: செவ்வாய், 28 மார்ச் 2017 (12:10 IST)

எடப்பாடியால் அப்செட்டில் இருக்கும் தினகரன்: எப்போ பஞ்சாயத்த கூட்டுவாங்களோ!

எடப்பாடியால் அப்செட்டில் இருக்கும் தினகரன்: எப்போ பஞ்சாயத்த கூட்டுவாங்களோ!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருவதாக கடந்த சில நாட்களாக கூறப்படுகிறது. இந்நிலையில் தினகரன் கூறிய ஒன்றை எடப்பாடி பழனிச்சாமி தட்டிக்கழித்ததால் அவர் மீது அப்செட்டில் உள்ளதாக கூறப்படுகிறது.


 
 
முன்னதாக ஆர்கே நகர் தொகுதியில் தினகரன் போட்டியிட வேண்டாம் என எடப்பாடி பழனிச்சாமி சொன்னபோது அதற்கு பதில் அளித்த தினகரன் உங்களுக்கு போட்டியாக வந்துவிடுவேன் என்ற பயமா என கூறியதாக தகவல்கள் வந்தது. இதனால் எடப்பாடி பழனிச்சாமி தனது ஆதரவாளர்களிடம் இதுகுறித்து புலம்பியதாகவும் கூறப்பட்டது.
 
மேலும் தினகரனுக்கு ஆர்கே நகரில் தேர்தல் பணி செய்ய முதல்வராக உள்ள எடப்பாடி பழனிச்சாமியை நியமித்ததும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் டிடிவி தினகரன் தலைமைச் செயலாளராக இருக்கும் கிரிஜா வைத்தியநாதனை உடனடியாக மாற்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
 
ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த எடப்பாடி பழனிச்சாமி, அவர் பிரதமர் மோடியின் பரிந்துரையில் வந்தவர். இப்போது அவரை மாற்றினால் மேலும் நமது ஆட்சிக்குச் சிக்கல் வந்துவிடும். அதனால் தேர்தல் நடக்கும் வரை பொறுமை காத்திருங்கள், பிறகு பார்த்துக் கொள்ளலாம் என கூறிவிட்டார்.
 
மேலும் தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நமக்கு எதிராக செயல்படுவதில்லை. நாம் சொல்வதை கேட்டுக் கொள்வார் என தினகரனை சமாதானப்படுத்தியிருக்கிக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. ஆனால் தன்னுடைய உத்தரவை எடப்பாடி பழனிச்சாமி மதிக்காமல் தட்டிகழித்துவிட்டார் என தினகரன் அப்செட்டில் இருப்பதாக அவரது வட்டாரத்தில் பேசப்படுகிறது.