1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 25 ஆகஸ்ட் 2022 (08:37 IST)

முடிவுக்கு வராத ஊதிய உயர்வு பிரச்சினை! – போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள் போராட்டம்!

bus
தமிழக போக்குவரத்துக் கழக ஊழியர்களின் 14வது ஊதிய உயர்வு ஒப்பந்தம் நேற்று கையெழுத்தான நிலையில் அதை எதிர்த்து சிஐடியு தொழிற்சங்கத்தினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் ஊதிய உயர்வு தொடர்பாக தொடர்ந்து கோரிக்கைகள் விடுத்து வந்த நிலையில் ஊதிய உயர்வு தொடர்பாக நடந்த பல கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாமல் இருந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் குரோம்பேட்டை மாநகர் போக்குவரத்து கழக பயிற்சி மையத்தில் 14வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பான 7ம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியது. நேற்று இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது.

அதன்படி ஓட்டுனருக்கு குறைந்தபட்ச ஊதிய உயர்வு ரூ.2,012, அதிகபட்சமாக ரூ.7,981 என்றும், நடத்துனருக்கு குறைந்தபட்ச ஊதிய உயர்வு ரூ.1965, அதிகபட்சமாக ரூ.6,640 என்றும் முடிவாகி ஒப்பந்தம் கையெழுத்தானது.

மேலும் ஊதிய உயர்வு ஒப்பந்தம் இதற்கு முன்னர் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்படுத்தப்பட்ட நிலையில் தற்போது அது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை என மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஓய்வு பெற்ற 85 ஆயிரம் ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்த்துவது குறித்த கோரிக்கை ஏற்கப்படவில்லை.

இதனால் இந்த ஒப்பந்தத்தில் உடன்படாத சிஐடியூ மற்றும் ஏஐடியுசி ஆகிய தொழிற்சங்கங்கள் வெளிநடப்பு செய்தனர். இந்நிலையில் ஒப்பந்த கால நீடிப்பு ஆண்டை மாற்றியமைத்தது மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தாததை கண்டித்து இன்று சிஐடியு தொழிற்சங்கத்தினர் மாநிலம் முழுவதும் உள்ள 600 பேருந்து அடுமனைகளில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஊதிய உயர்வு கூட்டத்தில் 66 தொழிற்சங்கங்கள் கலந்து கொண்ட நிலையில் மற்ற தொழிற்சங்கங்கள் ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டுள்ளன.