வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: சனி, 27 ஆகஸ்ட் 2016 (16:55 IST)

100 மணி நேர சாதனையை 26 மணி நேரத்தில் செய்து கின்னஸ் சாதனை படைத்த சென்னை வாலிபர்

ஆஸ்ரேலியாவை சேர்ந்த வாலிபர்  மாரத்தான் ஐயர்னிங் மூலம் 100 மணி நேரத்தில் 2000 துணிகள் ஐயர்னிங் செய்து கின்னஸ் சாதனை படைத்தார்.
 

 
இவரின் சாதனையை முறியடிக்க சென்னை வாலிபர் டேனியல் சூர்யா 101 மணி நேர மராத்தான் ஐயர்னிங் நிகழ்ச்சியை சென்னை ஸ்பென்சர் பிளாசா அரங்கில் 25ஆம் தேதி காலை தொடங்கினார்.
 
சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி தொடங்கி வைத்த சாதனை நிகழ்ச்சியை லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் பிரமாண்டமான முறையில் செய்திருந்தார்கள்.
 
நேற்று காலை தொடங்கிய சாதனை நிகழ்ச்சியின் இரண்டாம் நாளில் மதியம் 1 மணிக்கு கின்னஸ் சாதனையான 2000 துணிகளுக்கு மேல் ஐயர்னிங் செய்து டேனியல் சூர்யா புதிய உலக சாதனை படைத்தார்.
 
முதல் முறையாக வெளிநாட்டினர் செய்த கின்னஸ் சாதனையை இந்தியர் அதிலும் குறிப்பாக சென்னை வாலிபர் முறியடித்தது குறிப்பிடத்தக்கது.
 
ஏற்கனவே இருந்த கின்னஸ் உலக சாதனையை டேனியல் சூர்யா முறியடித்த பிறகும் தொடர்ந்து ஐயர்னிங் செய்து வருகிறார். தொடர்ந்து 5 நாட்கள் இந்த சாதனை செய்ய இருக்கிறார். இந்த 5 நாளில் சுமார் 1 கோடி பேர்களிடம் கண் தான உறுதிமொழி பெற வேண்டும் என்பதே இவர் விருப்பமாம். 
 
இது குறித்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும் லயன்ஸ் கிளப் மாவட்ட தலைவருமான தியாகராஜா கூறும்போது, ”கண் தான விழிப்புணர்வை வலியுறுத்தி இந்த கின்னஸ் சாதனை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சாதனை நிகழ்ச்சி முடியும் போது ஒரு கோடி பேராவது கண் தான உறுதி தர வேண்டும் என்பதே எங்கள் எண்ணம். 
 
முதல் முதலாக வெளிநாட்டினர் செய்த கின்னஸ் சாதனையை ஒரு இந்தியர் குறிப்பாக தமிழர் முறியடித்ததை நாம் அனைவரும் கொண்டாட வேண்டும்” என்றார் தியாகராஜா.