1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 5 அக்டோபர் 2020 (08:57 IST)

அப்பிராணி பூனைகளை விஷம் வைத்து கொன்ற பக்கத்துவீட்டுக்காரர்! – சென்னையில் பரபரப்பு!

சென்னையில் பக்கத்து வீட்டுக்காரருடன் ஏற்பட்ட பகை காரணமாக அவர் ஆசையாக வளர்த்த பூனைகளை விஷம் வைத்து கொன்ற நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் திருமண தகவல் மையம் நடத்தி வருபவர் மதுரையை சேர்ந்த பிரகதீஷ். இவர் தனது வீட்டில் ஆசையாக சில பூனைக்குட்டிகளை வளர்த்து வந்துள்ளார். இது அவரது பக்கத்து வீட்டுக்காரரான ரவி என்பவருக்கு பிடிக்கவில்லை. பூனைகள் ரவி வீட்டு பக்கமாக சென்றால் கல், கட்டை போன்றவற்றால் அடித்து துன்புறுத்தி விரட்டியுள்ளார் ரவி. இதனால் ரவி – பிரகதீஷ் இடையே மோதல் ஏற்பட அப்போதே போலீஸில் புகார் அளித்துள்ளார் பிரகதீஷ். அதை தொடர்ந்து இனி பூனைகளை துன்புறுத்த மாட்டேன் என ரவியும் மன்னிப்பு கேட்டுள்ளார்.

இந்த சம்பவம் நடந்து சில ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் சில நாட்கள் முன்பு தனது சொந்த ஊரான மதுரைக்கு சென்றிருக்கிறார் பிரகதீஷ். திரும்ப வந்த போது தனது பூனைகள் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடந்துள்ளது. இதுகுறித்து சிசிடிவி காட்சியை ஆய்வு செய்தபோது ரவி மகன் சக்தி பூனைக்கு பால் வைத்த காட்சி பதிவாகியுள்ளது. இதுகுறித்து பிரகதீஷ் போலீஸில் புகார் அளிக்க, விசாரணை மேற்கொண்ட போலீஸாரிடம் பாலில் விஷம் வைத்து கொன்றதை ஒப்புக்கொண்டுள்ளார் ரவி. அதை தொடர்ந்து செல்ல பிராணிகள் வன்கொடுமை மற்றும் கொலை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளார்.