ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 19 செப்டம்பர் 2019 (14:00 IST)

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தாரா சென்னை மாணவர்? – தேடுதல் வேட்டையில் தனிப்படை!

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த மாணவரை தேடி பிடிக்க தனிப்படை அமைத்து விசாரித்து வருகிறது காவல்துறை.

மருத்துவ படிப்பில் சேர்வதற்காக தேசிய அளவில் நீட் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் வெற்றி பெறுபவர்கள் இந்தியாவில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்து மருத்துப் படிப்பு படித்து வருகிறார்கள்.

சென்னையை சேர்ந்த டாக்டர் வெங்கடேசனின் மகன் உதித் சூர்யா. சமீபத்தில் நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற இவர் தேனீயில் உள்ள மருத்துவ கல்லூரியில் சேர்ந்துள்ளார். இந்நிலையில் அவர் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவப்படிப்பில் சேர்ந்துள்ளதாக அவர் மீது புகார் தெரிவித்து கல்லூரிக்கு இ-மெயில் ஒன்று வந்துள்ளது.

அவரது ஆவணங்களை சோதித்த போது ஹால் டிக்கெட்டில் உள்ள அவரது புகைப்படத்திற்கும், அவரது உண்மை முகத்தோற்றத்திற்கும் நிறைய வேறுபாடுகள் இருந்துள்ளன. இதனால் சந்தேகமடைந்த கல்லூரி நிர்வாகிகள் உதித் சூர்யாவை அழைத்து விசாரித்திருக்கிறார்கள். அது தனது பழைய புகைப்படம் என்றும், கடந்த 3 ஆண்டுகளாக நீட் தேர்வு எழுதி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கடைசியாக நீட் தேர்வை மும்பையில் எழுதியுள்ளார்.

இதுகுறித்த தகவலை டெல்லி மருத்துவ கவுன்சிலுக்கு அனுப்பி வைத்துள்ளனர் கல்லூரி அதிகாரிகள். இதை கவனத்தில் எடுத்து கொண்ட அதிகாரிகள் இதுபற்றி விசாரிக்க சென்னையில் உள்ள உதித் சூர்யா வீட்டிற்கு சென்றுள்ளனர். ஆனால் அங்கு உதித் சூர்யா இல்லை. தலைமறைவாகிவிட்டார்.

இதுபற்றி தகவலறிந்த தேனீ மருத்துவ கல்லூரி அதிகாரிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். கல்லூரி நிர்வாகம் உதித் சூர்யாவை விசாரித்த சில நாட்களுக்கு பிறகு, தான் கல்லூரி படிப்பிலிருந்து விலகுவதாக உதித் சூர்யா எழுதி கொடுத்துவிட்டு கல்லூரிக்கு வருவதை நிறுத்தி கொண்டுள்ளார். சம்பவங்களின் அடிப்படையில் அவர் மீது சந்தேகம் இருப்பதாலும், தற்போது அவர் தலைமறைவாகி இருப்பதாலும் அவரை தேடிபிடிக்க தனிப்படை அமைத்து தேடி வருகிறது காவல் துறை.

மேலும் மும்பையில் உதித் சூர்யா தேர்வு எழுதிய அறையின் சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்து அவருக்கு பதிலாக தேர்வு எழுதியவர் யார் என்பதையும் கண்டுபிடிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாணவர் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியுள்ளதாக கூறப்படும் சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்று மேலும் ஆள்மாறாட்டங்கள் நடந்திருக்கலாம் என கருதப்படுவதால் மாணவர்களின் ஆவணங்கள் மீண்டும் சரிபார்க்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.