செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 30 நவம்பர் 2018 (14:21 IST)

சிலை கடத்தல் வழக்கு: அதிர்ச்சி தீர்ப்பை வெளியிட்ட உயர்நீதிமன்றம்

சிலை கடத்தல் வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
சிலை கடத்தல் தடுப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் நியமிக்கப்பட்டதும், அவர் அதிரடியாக செயல்பட்டு பல திருட்டு சம்பவங்களை கண்டறிந்தார். பல கோவில்களில் சிலைகள் திருடப்பட்டு போலி சிலைகள் வைக்கப்பட்டதை கண்டுபிடித்தார். அதோடு, தமிழகத்தில் 70 சதவீத கோவில்களில் போலியான சிலைகளே இருப்பதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினர். அதோடு, தமிழகத்தில் இருந்து கடத்தப்பட்டு வெளிநாட்டுக்கு கொண்டு செல்லப்பட்ட சில விலை மதிப்புடையை சிலைகளை அவர் மீட்டு தமிழகத்திற்கு கொண்டு வந்தார்.
ஆனால், தமிழக அரசுக்கு அவர் சரியான தகவலை அளிக்கவில்லை எனக்கூறி சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் இருந்து தமிழக அரசு அவரை பலமுறை நீக்க முயற்சி செய்தது. ஆனால், நீதிமன்றம் தலையிட்டு அவர் அந்த பணியிலேயே தொடர வேண்டும் என உத்தரவிட்டது.  சமீபத்தில் தமிழக அரசு இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என அரசாணை வெளியிட்டது.  இதனை எதிர்த்து வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதற்கிடையே இன்று பொன்.மாணிக்கவேல் பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார்.
 
இந்நிலையில் இன்று சிலை கடத்தல் வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தமிழக அரசு இவ்வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என வெளியிட்ட அரசணையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு உயர்நீதிமன்றம் கடுமையான கண்டனத்தையும், இது சட்டப்படி குற்றம் எனவும் தெரிவித்தது.
 
மேலும் ஓராண்டுக்கு ஐஜி பொன்மாணிக்கவேலை சிலை கடத்தல் சிறப்புப் பிரிவு அதிகாரியாக நீட்டித்தும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.