1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 13 ஜூலை 2021 (09:56 IST)

தண்ணீர் தேங்கினால் ரூ.10 லட்சம் வரை அபராதம்! – சென்னை மாநகராட்சி எச்சரிக்கை!

டெங்கு கொசுக்களை ஒழிக்கும் பணியில் தீவிரம் காட்டி வரும் சென்னை மாநகராட்சி தண்ணீர் தேங்கினால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளது.

கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கொசுக்களால் உருவாகும் ஜிகா வைரஸ் தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் டெங்கு, ஜிகா வைரஸ் போன்றவை ஏற்படுவதை தவிர்க்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் டெங்கு கொசு ஒழிப்பு பணியில் சென்னை மாநகராட்சி தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில் தண்ணீர் தேங்கி அதில் கொசுக்கள் வளர்வது கண்டறியப்பட்டால் கடும் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி வீடுகளுக்கு ரூ.200, அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ரூ.1,500, கடைகளுக்கு ரூ.5000, உணவகங்களுக்கு ரூ.25,000, நட்சத்திர விடுதிகள், தொழிற்சாலைகளுக்கு ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.