1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: திங்கள், 28 ஜூலை 2014 (15:15 IST)

'சமஸ்கிருத வாரத்தை திரும்பப் பெறுக' - மத்திய அரசை கண்டித்து சி.பி.எஸ்.சி. அலுவலகம் முற்றுகை: 200 பேர் கைது

சி.பி.எஸ்.சி. பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாட வேண்டும் என்ற உத்தரவைத் திரும்பப் பெற வலியுறுத்தி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் சி.பி.எஸ்.சி. அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட 200 பேரையும் காவல்துறையினர் கைது செய்து அப்புறப்படுத்தினர்.
 
ஆகஸ்ட் மாதம் 7 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை சி.பி.எஸ்.சி. பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாட வேண்டும் என்று மத்திய அரசு சமீபத்தில் சுற்றறிக்கை அனுப்பியது. இதற்கு பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
 
இந்நிலையில் சென்னை அண்ணாநகர் திருமங்கலத்தில் உள்ள சி.பி.எஸ்.சி பள்ளியின் தென் மண்டல அலுவலகத்தை இன்று காலை 11 மணிக்கு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர், அம்பேத்கார் மக்கள் இயக்கத்தினரும் சேர்ந்து மத்திய அரசின் சமஸ்கிருத மொழித் திணிப்பை எதிர்த்து அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
 
இந்நிகழ்வுக்கு, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் ஆனூர் ஜெகதீசன் தலைமை தாங்கினார். இதில் பொதுச் செயலாளர் கோவை ராமகிருஷ்ணன் உள்பட 200 பேர் கலந்து கொண்டனர். அவர்கள் மத்திய அரசை நோக்கி சமஸ்கிருத வாரத்தை திரும்ப பெற வேண்டும் என மாற்று சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்று கோஷமிட்டனர்.
 
இதுகுறித்து தகவல் அறிந்ததும் அண்ணா நகர் சரக காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முற்றுகையில் ஈடுபட்ட 200 பேரை கைது செய்தனர்.