வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 21 ஆகஸ்ட் 2018 (19:21 IST)

வெள்ளநீர் அளவு குறைந்தும் வாழை தோட்டங்களில் வடியாத நீர்

கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் மழையின் அளவு குறைந்துள்ளது. இதனால் அங்கிருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்பட்ட நீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து நேற்றைய நிலவரப்படி ஒரு லட்சத்து 50 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.



இந்நிலையில், இன்று அதிகாலை முதல் மேட்டூர் அணைக்கு ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் வருவதால், அணையில் இருந்து அதே அளவு தண்ணீரே திறக்கப்பட்டு வருகிறது.மேலும் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்துள்ளதால் நீர் வெளியேற்றம் அளவு 1 லட்சம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏற்கனவே வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கரூர் மாவட்ட கரையோர மக்களுக்கு தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில், கரூர் மாவட்டத்தில் காவிரி கரையோரம் பயிரிடப்பட்டிருந்த வாழைகளில், திடீரென்று காவிரி ஆற்றின் வெள்ள நீர் புகுந்ததினால் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த வாழைகள் முற்றிலும் நீரில் மூழ்கியது.

தற்போது வெள்ள நீர் குறைந்தும் வாழைகளில் உள்ள நீர் ஆனது இன்று வரை வடியவில்லை, இதனால் கரூர் மாவட்டத்தில், சேமங்கி,  தவிட்டுப்பாளையம், என்.புதூர், வாங்கல், வாங்கல் தவிட்டுப்பாளையம், நெரூர், அச்சமாபுரம், அரங்கநாதன்பேட்டை, திருமுக்கூடலூர், மாயனூர், இலாலாபேட்டை, குளித்தலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பயிரிடப்பட்டிருந்த வாழைகள், சுமார் பல ஆயிரம் ஏக்கர் வாழைகள் முற்றிலும் சேதமாகியதோடு, முழுக்க, முழுக்க மூழ்கியுள்ளது. இந்நிலை நீடித்தால் வாழையில் அழுகல் நோய் மற்றும் வாடல் நோய் ஆகியவைகள் தாக்கும்.

மேலும் தற்போது தான் வாழை அறுவடை சீசன் என்பதினால் பல வாழைகள் தார் ஊன்றிய வாழைகள் மூங்கில் நடாமல், இருந்ததையடுத்து பல ஆயிரம் வாழைகள் வெள்ள நீர் அடித்து சென்றுள்ளதினால் விவசாயிகள் பெருமளவில் கவலையில் ஆழ்ந்துள்ளனர். மேலும், பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த வாழைகளும் சேதம் அடைந்து வரும் நிலையில் பாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் அரசினுடைய நிவாரணத்தை பொறுத்து தான் இனிமேல் வாழை விவசாயம் செய்யலாமா என்று காத்திருக்கின்றனர்.

சி.ஆனந்தகுமார்