வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ashok
Last Updated : வியாழன், 26 நவம்பர் 2015 (16:24 IST)

ஜெயலலிதாவின் சிறுதாவூர் பங்களா சுற்றுச் சுவரால் தண்ணீரில் மிதக்கும் தலித் மக்களின் வீடுகள்

காஞ்சிபுரம் மாவட்டதில் உள்ள ஜெயலலிதாவின் சிறுதாவூர் பங்களா சுற்றுச் சுவரால் பையனூர் ஊராட்சிக்குட்பட்ட பண்டிதர்மேடு பகுதியில் 50க்கும் மேற்பட்ட தலித் மக்களின் வீடுகள் தண்ணீரில் மூழ்கியுள்ளதாக கூறப்படுகிறது.


 
 
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உட்பட்ட திருப்போரூர் வட்டத்திற்குட்பட்ட சிறுதாவூர், ஆமுர், மானாம்பதி, ஆமையம்பட்டு, பஞ்சந்திருத்தி, ஆலத்தூர், தண்டலம், பண்டிதமேடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் தொடர் கனமழை காரணமாக வீடுகள் தண்ணீரில் மூழ்கி இருக்கிறது.

திருப்போரூர் அடுத்த சிறுதாவூரில் 250 ஏக்கரில் அமைந்துள்ள பங்களா தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சொந்தமானது என்று சொல்லப்படுகிறது. இந்த பங்களாவின் சுற்றுச்சுவரால் திருப்பிவிடப்பட்ட தண்ணீர் பையனூர் ஊராட்சி பண்டிதமேடு பகுதியில் வசிக்கும் 50க்கும் மேற்பட்ட தலித் மக்கள் குடியிருப்பில் புகந்துள்ளது.
 
திருப்போரூர் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் இ.சங்கர், சிறுதாவூர், ஆமுர், பண்டிதமேடு உள்ளிட்ட கிராமங்களில் நேரில் சென்று பார்த்துள்ளார்
 
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் பகுதிகளில் ஏராளமான கிராமங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது குறிப்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சிறுதாவூர் பங்களாவிற்குள் 36 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இதில் 6 ஏக்கர் நீர் நிலைகள், தண்ணீர் வரத்து கால்வாய்கள் குளம், குட்டை உள்ளிட்டவைகள் உள்ளன. இந்த நிலத்தையும் சேர்த்து சுற்றுச் சுவர் அமைத்திருப்பதால் அப்பகுதி வழியாக செல்ல வேண்டிய தண்ணீர் முழுவதும் பையனூர் ஊராட்சிக்குட்பட்ட பண்டிதர்மேடு பகுதியில், தலித் மக்கள் வசிக்கும் பகுதியில் இடுப்பளவிற்கு சூழ்ந்துள்ளது.
 
இப்பகுதியில் ஆய்வுக்கு வந்த அரசு அலுவலர்கள் வீடு இடிந்தால் மட்டுமே நிவாரணம் என கூறியுள்ளனர். திருப்போரூர் வட்டத்திற்குட்பட்டு பல கிராமங்களில் தண்ணீர் வீட்டிற்குள் புகுந்து மக்கள் தங்கள் உடமைகளை இழந்துள்ளனர். குறிப்பாக இருளர் சமூகத்து மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.பாதிக்கப்பட்டவர்களை உரிய முறையில் கணக்கிட்டு பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்