1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Modified: செவ்வாய், 16 டிசம்பர் 2014 (15:31 IST)

வாழை வரத்து அதிகரிப்பால் விலையில் வீழ்ச்சி

ஈரோடு மாவட்டத்தில் வாழை சீசன் முடிவுக்கு வருவதால் நேற்று விற்பனைக்கு வந்த வாழை தார்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இதன் காரணமாக விலை சற்று குறைந்தது.


 
 
ஈரோடு மாவட்டம் பவானி, அந்தியூர், கோபிசெட்டிபாளையம், பெருந்துறை, சத்தியமங்கலம் மற்றும் பவானிசாகர் பகுதியில் ஐந்தாயிரம் ஏக்கருக்கு மேல் விவசாயிகள் வாழை பயிரிட்டுள்ளனர். கதளி, நேந்திரம், செவ்வாழை, பூவன் உள்ளிட்ட வாழை ரகங்கள் முக்கியத்துவம் பெற்றதாகும்.
 
இப்பகுதியில் விளையும் வாழை தார்களை தொடக்க வேளாண்மை உற்பத்தியளார்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ஏலம் முறையில் விற்பனை செய்வது வழக்கம். மேலும் வியாபாரிகள் நேரடியாக விவசாயிகளிடம் சென்றும் கொள்முதல் செய்கின்றனர்.
 
வேளாண்மை சங்கத்தில் நடக்கும் ஏலத்தில் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இதுதவிர கோயமுத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் கலந்துகொண்டு வாழை தார்களை ஆர்வத்துடன் ஏலம் எடுத்து செல்வர். ஏலத்தில் கதளி மற்றும் நேந்திரம் வாழை பத்து டன் விற்பனைக்கு வந்தது. கடந்த வாரம் கிலோ ஒன்று ரூ.35 க்கு விற்பனையான கதளி தற்போது கிலோ ஒன்று ரூ.31 வரை விற்பனையானது. நேந்திரம் கடந்த வாரம் கிலோ ஒன்று ரூ.29 க்கு விற்பனையானது. தற்போது கிலோ ஒன்று ரூ.27 வரை விற்பனையானது. இதேபோல் அனைத்து ரக வாழை தார்களும் நேற்று விலை சற்று குறைவாக விற்பனையானது.
 
தற்போது வாழையின் அறுவடை சீசன் முடியும் நிலைக்கு வருவதால் விற்பனைக்கு வரும் வாழையின் அளவு அதிகரித்துள்ளது. இதனால் விலை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.