செவ்வாய், 19 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : திங்கள், 13 பிப்ரவரி 2017 (18:07 IST)

ஒரு வாரத்தில் சட்டப்பேரவையில் பலப்பரீட்சை : ஆளுநருக்கு அட்டார்னி ஜெனரல் ஆலோசனை

தமிழக சட்டசபையை கூட்டி, பலப்பரீட்சை நடத்தலாம் என மத்திய அரசின் வழக்கறிஞர் ஆளுநருக்கு பரிந்துரை செய்துள்ளார்...


 

 
தமிழ்நாடு அரசியலை பொறுத்த வரை, முதல்வர் ஓ.பி.எஸ் மற்றும் சசிகலா ஆகிய இருவருக்கும் இடையே உள்ள மோதல்தான் எல்லோராலும் கவனிக்கப்பட்டு வருகிறது...
 
அதிமுக எம்.எல்.ஏக்களின் ஆதரவு தனக்கு இருப்பதால், ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என சசிகலா, ஆளுநரிடம் கடந்த 9ம் தேதி கோரிக்கை வைத்தார். அதேபோல், தன்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா கடிதம் பெறப்பட்டது என முதல்வர் ஓ.பி.எஸ் ஆளுநரிடம் புகார் தெரிவித்துள்ளார். ஆனால், ஆளுநர் இதுவரை சசிகலாவை ஆட்சி அமைக்க அழைக்கவில்லை. அதேபோல் ஓ.பி.எஸ்-ற்கு சாதகமாகவும் எதுவும் அறிவிக்கவில்லை.. எனவே, தமிழகத்தில் ஒரு பதட்டமான சூழ்நிலை உருவாகியுள்ளது. 
 
சசிகலா தொடர்புடைய சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பான தீர்ப்பு விரைவில் வரவுள்ளதால், அதுபற்றி ஆளுநர் சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. 
 
இந்நிலையில், ஆளுநரின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் (தலைமை வழக்கறிஞர்) முகில் ரோத்தகி ஆலோசனை தெரிவித்துள்ளார். யாருக்கு பெரும்பான்மை என்பதை சட்டசபையை கூட்டி முடிவு செய்யலாம் எனவும், ஒரு வாரத்தில் சட்டப்பேரவையில் பலப்பரிட்சை நடத்தலாம் எனவும் தமிழக ஆளுநருக்கு அவர் பரிந்துரை செய்துள்ளார்.