1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 16 அக்டோபர் 2018 (16:15 IST)

விதவையானால்தான் காதலனை திருமணம் செய்ய முடியும் - அனிதா அதிர்ச்சி வாக்குமூலம்

கணவர் கதிரவனை கொலை செய்ததன் பின்னணி குறித்து அவரின் மனைவி அனிதா கொடுத்துள்ள வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
தூத்துகுடியை சேர்ந்த அனிதாவுக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்தான் அருப்புக்கோட்டையை சேர்ந்த கதிரவன் என்பவருடன் திருமணம் நடந்தது. ஆனால் திருமணத்திற்கு முன்னரே அனிதா, தனது பள்ளித்தோழர் ஜெகன் என்பவரை காதலித்து வந்தார். இந்த காதலுக்கு பெற்றோர் மறுப்பு தெரிவித்ததோடு உடனே அவருக்கு கதிரவனோடு கட்டாயத் திருமணமும் செய்து வைத்துவிட்டனர்.
 
இதனையடுத்து சென்னைக்கு கணவருடன் குடிவந்த அனிதா, கதிரவன் தமபதியினர் சமீபத்தில் திருவான்மியூர் கடற்கரைக்கு சென்றனர். அப்போது தனது காதலர் ஜெகனுக்கு தகவல் கொடுத்த அனிதா, கணவர் கதிரவனோடு கண்ணாமூச்சி விளையாடுவது போல நடித்து  காதலனுடன் சேர்ந்து இரும்புக்கம்பியால் தாக்கி கொலை செய்ய முயற்சித்து அதன்பின்னர் நகை கொள்ளை போனதாக நாடகமாடினார்.
 
ஆனால் போலீஸ் விசாரணையில் அனிதா உண்மையை கூறிவிட்டதால் இருவரும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். படுகாயம் அடைந்த கதிரவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அனிதா மற்றும் காதலன் ஜெகன் இருவர் மீதும் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 
மேலும், விசாரணையில் அனிதா, கதிரவனை வேண்டாவெறுப்புடன் திருமணம் செய்து கொண்டதாகவும், கோத்தகிரிக்கு தேனிலவு சென்றபோதே கணவர் கதிரவனை கொலை செய்ய முயற்சித்ததாக அதிர்ச்சி தகவலைக் கூறியுள்ளார்.
 
இந்நிலையில் இரும்புக்கம்பியால் தாக்கப்பட்டு உயிருக்குப் போராடி வந்த கதிரவன் நேற்று சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்..இதையடுத்து அனிதா மற்றும் ஜெகன் மீது பதியப்பட்டிருந்த கொலை முயற்சி வழக்கு தற்போது கொலை வழக்காக மாற்றப்படு விசாரிக்கப்பட்டு வருகிறது.
 
போலீசாரிடம் அனிதா வாக்குமூலத்தில் “ஜெகன் என்னை விட வயதில் குறைந்தவன். எனவே, அவனை திருமணம் செய்ய என் பெற்றோர் சம்மதிக்கவில்லை. கதிரவனுடன் கட்டாய திருமணம் செய்து கொண்டனர். எனவே, நான் விதவை ஆனால் மட்டுமே ஜகனை திருமணம் செய்ய என் பெற்றோர் அனுமதிப்பார்கள் என நினைத்தே, என் காதலன் மூலம் என் கணவரை கொலை செய்ய முடிவெடுத்தேன்” எனக் கூறியுள்ளார்.