வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: புதன், 22 நவம்பர் 2017 (21:57 IST)

அசோக்குமாருக்கு நாங்கள் பணம் கொடுக்கவே இல்லை! அன்புச்செழியன் தரப்பு திடீர் பல்டி

சினிமா பைனான்சியர் அன்புச்செழியனிடம் வாங்கிய பணத்தை கொடுக்க முடியவில்லை என்றும், அதனால் அவருடைய மிரட்டலால்தான் தற்கொலை செய்து கொள்கிறேன் என்றும் தெளிவாக கடிதம் எழுதி வைத்துவிட்டு அசோக்குமார் நேற்று தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில், அன்புச்செழியனின் 'கோபுரம் பிலிம்ஸ்' மேனேஜர் முரளி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் அசோக்குமாருக்கு நாங்கள் பணம் கொடுக்கவே இல்லை என்று கூறியுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:





இன்றைய நாளிதழ்கள், தொலைக்காட்சி செய்திகளில் திரு அசோக்குமார் என்பவர் தற்கொலை செய்து கொண்டு அவர் ஒரு கடிதம் எழுதி வைத்ததாகவும், அதில் சில வார்த்தைகள் எழுதி வைத்துள்ளதாகவும் செய்திகளில் வெளிவந்துள்ளது. அசோக்குமார் என்பவர் எழுதி வைத்ததாக கூறப்படும் கடிதம் அவர் எழுதி வைத்ததுதானா? அசோக்குமார் என்பவர் திருச்சி குமார் அவர்களின் உதவியாளர். நாங்கள் அசோக்குமார் என்பவருக்கு எந்த பண வரவு செலவும் செய்யவில்லை. படம் தயாரிப்பதற்கு சசிகுமார் அவர்கள் தான் எங்களிடம் பணம் பெற்றுள்ளார். எங்களிடம் எந்தவித வியாபார தொடர்பும் இல்லாத அசோக்குமார் எங்களை கடிதத்தில் எழுதி வைத்துள்ளார் என்பது அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் அளிக்கிறது.

எங்களிடம் பண உதவி பெற்று படம் தயாரிக்கிறார்கள். அதை படம் ரிலீஸ் செய்யும்போது செட்டில் செய்வார்கள். இதுதான் சினிமா நடைமுறை. எந்த முதலீடும் இல்லாமல் சிலர் படம் தயாரிப்பதாக வருகிறார்கள். எந்தவித செக்யூரிட்டியும் இல்லாமல் இவர்களை நம்பி பணம் தருகிறோம். இவர்கள் ஒரு படத்திற்கு பலரிடம் பணம் வாங்குகிறார்கள். ஆனால் இவர்கள் படம் தயாரிக்காமல், வீடு, கார் என்று வாங்கி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து பின்னர் பண உதவி செய்த எங்களையும் சிரமப்படுத்துகிறார்கள். இப்படி சந்தர்ப்பங்களை பயன்படுத்தி ஒரு கும்பல் மோசடி பண்ண வேண்டும் என்ற நோக்கத்தில் அலைவதாக தெரிகிறது. நாங்கள் இருபது ஆண்டுகளாக சினிமா தொழில் செய்கிறோம். எங்கும் எங்கள் மேல் எந்த புகாரும் கிடையாது.

மேற்படி அசோக்குமார் என்பவர் எழுதியதாக சொல்லப்படுவதில் எள்ளளவும் உண்மை இல்லை என்பதை இதன் மூலம்தெரிவித்து கொள்கிறோம்.