வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : புதன், 8 ஏப்ரல் 2015 (09:20 IST)

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனுக்கு திடீர் உடல்நலக் குறைவு: மருத்துவமனையில் அனுமதி

திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை திமுக தலைவர் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் நேரில் சென்று பார்த்தனர்.
 
திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முதுகுவலி காரணமாக கோவையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிறிது காலம் ஓய்விற்குப் பிறகு, அவர் மீண்டும் பொதுக்கூட்டம், பிரசாரம் என கட்சிப்பணியில் ஈடுபட்டு வந்தார்.
 
இந்நிலையில், நேற்று காலை 7 மணியளவில், அன்பழகனுக்கு திடீரென தலைச்சுற்றல் மற்றும் மயக்கம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவரது உறவினர்கள் உடனடியாக அவரை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
 
மருத்தவமனையில் அவருக்கு நரம்பியல் சம்பந்தபட்ட மருத்துவ நிபுணர்களால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அறிந்த, திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின், ராஜாத்தி அம்மாள், முன்னாள் அமைச்சர் பொன்முடி, முன்னாள் எம்.பி. டி.கே.எஸ்.இளங்கோவன் மற்றும் திமுக நிர்வாகிகள் மருத்துவமனைக்கு விரைந்து சென்றனர்.
 
அன்பழகனின் உடல்நலம் குறித்து விசாரித்த கருணாநிதி கண்கலங்கினார். மருத்துவமனையில், அன்பழகனின் மகன் அன்புச் செல்வன், மகள்கள் மணமல்லி, செந்தாமரை மற்றும் உறவினர்கள் உடன் இருந்து கவனித்து வருகின்றனர்.
 
சிகிச்சைக்குப் பின்னர் அன்பழகனின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.