1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: புதன், 8 மார்ச் 2017 (23:13 IST)

எந்த பாட்டுக்கு ஐ.நாவில் ஐஸ்வர்யா தனுஷ் ஆடப்போகிறார் தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகளும், தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா இன்று மகளிர் தினத்தை அடுத்து ஐ.நாவில் பரதநாட்டிய  நடனம் ஆடுகிறார். இந்தியர்களுக்கு பெருமை தேடி தரும் இந்த நடனம் சுமார் ஒரு மணி நேரம் நடைபெறவுள்ளது.




இந்நிலையில் ஐஸ்வர்யா தனுஷ் எந்த பாடலுக்கு நடனம் ஆடப்போகிறார் என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது. கவியரசர் வைரமுத்து எழுதிய 'ரத்த தானம்' என்ற கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள தாலாட்டு பாடல் ஒன்றுக்குத்தான் ஐஸ்வர்யா நடனம் ஆடவுள்ளாராம்.

சிறுவயது குழந்தை ஒன்றை வீட்டில் தனியே விட்டுவிட்டு வேலைக்கு செல்லும் தாய் ஒருவர் உருகி உருகி பாடும் தாலாட்டு பாடல்தான் இது. இந்த பாடலை படிக்கும்போதே கண்களின் ஓரத்தில் கண்ணீர் கசியும் உணர்வை நீங்களும் பெருவீர்கள். இதோ அந்த பாடல்:

    சோலைக்குப் பிறந்தவளே!
    சுத்தமுள்ள தாமரையே!
    வேலைக்குப் போகின்றேன் - வெண்ணிலவே கண்ணுறங்கு!

    அலுவலகம் விட்டு -
    அம்மா வரும் வரைக்கும் -
    கேசட்டில் தாலாட்டு - கேட்டபடி கண்ணுறங்கு!

    ஒரு மணிக்கு ஒரு பாடல்
    ஒளிபரப்பும் வானொலியில்
    விளம்பரங்கள் மத்தியில் - விழி சாத்தி நீயுறங்கு!

    9 மணி ஆனால் உன் அப்பா சொந்தமில்லை -
    9:30 மணி ஆனால் உன் அம்மா சொந்தமில்லை -
    ஆயாவும் தொலைக்காட்சியும் அசதியில் தூங்கிவிட்டால் -
    தூக்கத்தைத் தவிர துணைக்கு வர யாருமில்லை!

    20-ம் நூற்றாண்டில் என் கருவில் வந்தவளே!
    இதுதான் கதியென்று - இன்னமுதே கண்ணுறங்கு!

    தூரத்தில் இருந்தாலும் தூயவளே -
    உன் தொட்டில் ஓரத்தில் -
    என் நினைவு - ஓடிவரும் கண்ணுறங்கு!

    பேருந்தில் நசுங்கி, பிதுங்கிப் போகிற வேளையிலும்
    எடை கொஞ்சம் இழந்து இறங்குகின்ற வேளையிலும்
    பூப்பூவாய் உனது முகம் புறப்பட்டு வரும் கண்ணே!

    தந்தை வந்து கொஞ்சுவதாய் -
    தங்க மடியில் தூங்குவதாய் -
    கண்ணே கண்மணியே - கனவு கண்டு - நீயுறங்கு!

    புட்டிப்பால் குறையவில்லை -
    பொம்மைக்கும் பஞ்சமில்லை -
    தாய்ப்பாலும் தாயும் இன்றி -
    தங்க மகனுக்கு என்ன குறை?

    மாலையிலே ஓடி வந்து
    மல்லிகையே உன்னை அணைத்தால்
    சுரக்காத மார்பும் சுரக்குமடி- கண்ணுறங்கு!

    தாலாட்டுப் பாட்டில் தளிரே - நீ
    தூங்கிவிட்டால் கோலாட்டம் ஆட
    கொண்டவனுக்கும் ஆசை வரும்!

    உறவுக்குத் தடையாக
    'ஓ' என்று அலறாமல் -
    இரவுக்கும் மிச்சம் வைத்து
    இப்போது - நீ உறங்கு!

    தாயென்று காட்டுவதற்கும்
    தாவி எடுப்பதற்கும்
    ஞாயிற்றுக்கிழமை வரும் - நல்லவளே கண்ணுறங்கு!