1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 2 ஜனவரி 2019 (11:09 IST)

திருவாரூர் இடைத்தேர்தல் – ஜெ. மரணத்தைக் கையில் எடுக்கும் அதிமுக

காலியாக உள்ள திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற கட்சிகள் அனைத்தும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

திமுக தலைவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உயிரிழந்ததை அடுத்து அவரின் தொகுதியான திருவாரூர் காலியான தொகுதியாக அறிவிக்கப்பட்டது. அதையடுத்து அந்த தொகுதிக்கு இப்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜனவரி 28 ஆம் தேதி திருவாரூரில் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதையடுத்து முக்கியக் கட்சிகளான திமுக, அதிமுக மற்றும் அமமுக ஆகிய கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரமாகியுள்ளனர். திமுக மற்றும் அதிமுக ஆகியக் கட்சிகள் வேட்பாளர் தேர்வை ஆரம்பித்து விட்டன. அமமுக இதுவரை வெளிப்படையான காய் நகர்த்தல்களைத் தொடங்கவில்லை.

திமுக வுக்கு இந்த தேர்தலில் வெற்றிபெற அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ஏனென்றால் கலைஞரின் சொந்த தொகுதி மற்றும் அவரது மரணத்திற்குப் பின் நடக்கும் இடைத்தேர்தல் ஆகியக் காரணங்களால் திமுக வுக்கு அனுதாப ஓட்டுகள அதிகமாகக் கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும் மக்கள் ஆளும் கட்சியின் மீது கடும் அதிருப்தியில் இருப்பதும் முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.

இதனால் அதிமுக மற்றும் அமமுக இடையே இரண்டாவது இடத்தை யார் பிடிக்கப்போவது என்ற விஷயத்தில் அதிகப் போட்டி இருப்பதாகத் தெரிகிறது. எனவேதான் அதிமுக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் ஜெயலலிதா மரணத்தைக் கையில் எடுத்துள்ளது. அதிமுக வுக்கு இருக்கும் ஒரே ஆயூதமும் டிடிவி தினகரனுக்கு இருக்கும் மைனஸ் பாயிண்ட்டாவாகவும் ஜெயலலிதாவின் மரணம்தான் இருக்கிறது. எனவேதான் அதிமுக அமைச்சர்கள் அனைவரும் சொல்லி வைத்தாற்போல் ஜெ. வின் மரணத்திற்கு அமைக்கப்ப்ட்ட விசாரனைக் கமிஷன் விரைவில் அறிக்கைத் தாக்கல் செய்யவேண்டும் எனக் கூறி வருகின்றனர். இதன் மூலம் ஜெ வின் மர்ம மரணத்திற்கும் தங்களுக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை என்பது போலவும் அது முழுக்க முழுக்க சசிகலா அன் கோ வின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு நடந்த விஷயம் என்பது போல நிரூபிக்க முயல்கின்றனர். இதன் மூலம் அமமுக ஓட்டுகளைக் கவர முடியும் என நினைக்கிறது அதிமுக.

ஆனாலும் டிடிவி, இத்தகைய குற்றச்சாட்டுகளுடனே ஆர்.கே. நகர் தேர்தலை சந்தித்து அதில் வெற்றியும் பெற்றார் என்பதையும் அதிமுக மற்றும் திமுக வினர் மறந்திருக்கமாட்டார்கள்.