1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 21 டிசம்பர் 2017 (13:04 IST)

அதிமுகவின் தேர்தல் விதிமீறல்: தேர்தல் ஆணையம் இதை கவனிக்கவில்லையா?

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்த பின்னர் அவரது ஆர்கே நகர் தொகுதிக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தல் பெரும் பரபரப்புக்கு மத்தியில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
 
இந்நிலையில் நேற்று தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல் வெளியிட்ட வீடியோ ஒன்று தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போது அவர் பழச்சாறு அருந்தும் வீடியோவை அவர் வெளியிட்டார்.
 
இந்த வீடியோ ஆர்கே நகர் தேர்தல் காரணமாகத்தான் வெளியிட்டார் என பலரும் குற்றம் சாட்டினர். தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருக்கும் போது, தேர்தல் பிரச்சாரம் முடிந்த பின்னர் இந்த வீடியோ வெளியானதால் அவர் தேர்தல் விதிமீறலை செய்துவிட்டார் என அவர் மீது வழக்கு பதிவு செய்ய தலைமை தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி உத்தரவிட்டார்.
 
இந்த வீடியோ வெறும் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் இருக்கும் வீடியோ தான். அதில் தினகரனுக்கு வாக்களியுங்கள் என எந்த அறிவுறுத்தலும் இல்லை. ஆனால் இதற்கு நடவடிக்கை எடுத்த தேர்தல் ஆணையம் ஆளும் கட்சி அறிக்கை வெளியிட்டு இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களியுங்கள் என கூறியுள்ளதை கண்டுகொள்ளவில்லை.
 
நேற்று வெளியான பிரபல தமிழ் மாலை நாளிதழில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் கூட்டாக சேர்ந்து வெளியிட்ட அறிக்கை ஒன்று வெளியானது. அதில் ஆர்கே நகர் தொகுதி வாக்காளர்கள் அனைவரும் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து அதிமுக வேட்பாளர் மதுசூதனனை வெற்றிபெற செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதனை மட்டும் தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன் என பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.