1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 24 ஜனவரி 2018 (09:45 IST)

சென்னையில் காதலன் ஏமாற்றியதால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

காதலன் ஏமாற்றியதால் சென்னை எண்ணுரைச் சேர்ந்த இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை எண்ணூரைச் சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி கர்பகம். இவர்களின் சந்தியா(19) என்ற மகள் தனியார் கிளினிக்கில் நர்சாக பணிபுரிந்து வந்தார். சந்தியாவும், தாம்பரத்தை சேர்ந்த ரபீக்(26) என்ற இளைஞரும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு ரபீக்கின் வீட்டில் கடுமையான எதிர்ப்பு கிளம்பிய நிலையில், காதலர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி தலைமறைவாக வாழ்ந்து வந்தனர். சந்தியாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், காவல் துறையினர் திருவண்ணாமலையில் இருந்த ரபீக், சந்தியாவை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
 
இந்நிலையில் வீட்டுக்கு சென்ற சந்தியா சோகமாக இருந்ததைக்கண்டு வருந்திய அவரது பெற்றோர், ரபீக்கின் வீட்டிற்கு சென்று திருமணம் பற்றி பேசியுள்ளனர்.  ஆனால் ரபீக் வீட்டார் திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளவில்லை. இதனைக்கேட்டு மனமுடைந்த சந்தியா, வீட்டில் யாருமில்லா நேரத்தில் மண்ணெண்ணயை ஊற்றி தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  இதனால் சந்தியாவின் பெற்றோர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.