வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 18 நவம்பர் 2018 (18:55 IST)

ஐ.எம்.இ.ஐ எண் மாற்றம் செய்து விற்பனையாகும் திருட்டு செல்போன்கள்

சென்னையில் வழிப்பறி மூலம் திருடப்படும் செல்போன்களின் ஐ.எம்.இ.ஐ எண் மாற்றம் செய்து விற்பனை செய்யும் கும்பலை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இதுவரை சுமார் 2500 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் தீவிர விசாரணைக்கு பின்னர் இன்னும் பல செல்போன்கள் பறிமுதல் செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

செல்போன் திருட்டு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இதுகுறித்த புகார்களும் குவிந்துள்ளது. ஐ.எம்.இ.ஐ எண்ணை வைத்து செல்போன் இருக்கும் இடத்தை சைபர் க்ரைம் போலீசார் கண்டுபிடித்த நிலையில் தற்போது அந்த எண்ணையும் தொழில்நுட்பம் மூலம் மாற்றி விற்பனை செய்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பாரிமுனையில் உள்ள பர்மா பஜாரில் இருந்து 330 திருட்டு போன்களும், தி.நகரில் உள்ள சத்யா பஜாரில் 770 செல்போன்களும் சென்னையின் மற்ற பகுதியில் இருந்து சுமார் 1400 செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் இதுதொடர்பாக 8 பேர்களை கைது செய்து விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

செல்போன் திருடர்களிடம் இருந்து இடைத்தரகர் மூலம் கைமாறி பின்னர் செல்போன் கடைகளுக்கு வருவதாகவும், செல்போன் கடைக்காரர்கள் அதனை மாற்றம் செய்து விற்பனை செய்து வருவதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.