1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: சனி, 1 ஏப்ரல் 2017 (00:36 IST)

ஃபேஸ்புக் பயனாளிகள் 21 பேர் அதிரடி கைது. கடலூரில் பதட்டம்

இந்திய தலைநகர் டெல்லியில் கடந்த 18 நாட்களாக தமிழக விவசாயிகள் போராடி வரும் நிலையில், இந்த போராட்டத்திற்கு ஆதரவாக தற்போது மாணவர்கள் களமிறங்கியுள்ளனர். நேற்று சென்னை மெரீனாவில் கடலில் இறங்கி போராட முயன்ற மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது கடலூரில் போராட்டத்திற்கு வருமாறு ஃபேஸ்புக் மூலம் அழைப்பு விடுத்த 21 மாணவர்கள் அதிரடியாக காவல்துறையினர்களால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



 


இதுகுறித்து கடலூர் போலீஸ் வட்டாரங்கள் கூறியபோது, 'விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்க , அண்ணா விளையாட்டு அரங்கில் ஓன்று கூடுவோம் என்று அழைப்பு விடுத்த 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி
தமிழக சைபர் கிரைம் போலீசார்  மேலும் சிலரது சமூக வலைதளங்களை தொடர்ந்து காண்காணித்து வருகின்றனர். தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக போராட அழைப்பு விடுவிக்கும் நபர்கள் கைது செய்யப்படுவார்கள்' என்று கூறினர்

தமிழக விவசாயிகளின் போராட்டத்தை ஆதரிப்பதாக தமிழக அரசு ஒருபுறம் கூறிக்கொண்டு இருக்கும் நிலையில் இன்னொரு புறம் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட கூடாது என்று அடக்குமுறை செய்து இரட்டை வேடம் போடுவதாக சமூக வலைத்தள பயனாளிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்