1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 18 மார்ச் 2022 (13:29 IST)

இன்று 11 மாவட்டங்களில் மழை - எங்கெங்கு தெரியுமா?

தமிழ்நாட்டில் நிலவும் கீழடுக்கு சுழற்சியால் இன்று 11 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல். 

 
வங்க கடலில் வடகிழக்கு பருவக்காலத்தை ஒட்டி பல காற்றழுத்த தாழ்வு மண்டலங்களும், புயல்களும் ஏற்படுவது வழக்கம். வழக்கமாக பருவமழை பிப்ரவரி முதல் பகுதியில் முடிந்து விடும் நிலையில் காற்றழுத்த தாழ்வு பகுதிகள் அரிதாகவே ஏற்படுவதுண்டு. சமீபத்தில் அவ்வாறாக காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒன்று தமிழகத்தில் கரை கடந்தது.
 
மீண்டும் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சமீபத்தில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி கிழக்கு வடகிழக்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் 19 ஆம் தேதி காலை நிலவக்கூடும். 
 
மேலும் இது வடக்கு திசையில் அந்தமான் கடலோர பகுதி வழியாக நகர்ந்து 20 ஆம் தேதி காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். இந்நிலையில் தமிழ்நாட்டில் நிலவும் கீழடுக்கு சுழற்சியால் இன்று 11 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கோவை, திருப்பூர், நீலகிரி, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரியில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.