ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 21 ஜனவரி 2019 (08:03 IST)

என்னை யாரும் எதுவும் கேட்கவில்லை – பிரதமர் வேட்பாளர் குறித்து ஸ்டாலின் விளக்கம் …

ராகுல் காந்தியை பிரதமராக முன்மொழிந்ததில் தவறு ஏதும் இல்லை எனவும் அதனால் கூட்டணிக்குள் எந்த விரிசலும் எழுவில்லை எனவும் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற முன்னாள் திமுக தலைவர் கலைஞர் சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில் மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக திமுக தலைவர் முக.ஸ்டாலின் முன்மொழிந்து திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட மெகா கூட்டணியை உறுதி செய்தார். ராகுலை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்ததது அந்த கூட்டணிக்குள் சலசலப்பை உருவாக்கியது. மம்தா பானர்ஜி போன்ற கூட்டணித் தலைவர்கள் பிரதமர் யார் என்பதை தேர்தல் வெற்றிக்குப் பிறகு முடிவு செய்து கொள்ளலாம். அதற்கு இப்போது ஒன்றும் அவசரம் இல்லை எனவும் தேர்தல் வெற்றியே முக்கியம் எனவும் கூறினர்.

இதனால் கூட்டணிக்குள்ளேயே ராகுலைப் பிரதமர் வேட்பாளராக எற்றுக் கொள்வதில் தயக்கம் இருப்பதாகக் கூறப்பட்டது. மேலும் பாஜக வினர் சிலர், மீண்டும் ஒருமுறை ராகுலை பிரதமர் வேட்பாளர் என சொல்லும் தைரியம் ஸ்டாலினுக்கு இருக்கிறதா எனக் கேள்விக் கேட்டனர்.

இதற்குப் பதிலளிக்கும் விதமாக நேற்று ஸ்டாலின் ஒரு விழாவில் கலந்து கொண்டு பேசினார். கட்சிக்காரரின் திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்திய பின்னர் ‘தமிழக உள்ள சூழ்நிலைக்கு ஏற்பத்தான் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை முன்மொழிந்தேன். அதில் தவறு ஏதும் இல்லை.எங்கள் (திமுக) கூட்டத்தில் நாங்கள் சொல்வதற்கு எங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது. அதனால் நாங்கள் சொன்னோம். பிரதமர் வேட்பாளராக ராகுலை முன்மொழிந்ததை தவறு என கொல்கத்தா கூட்டத்தில் பங்கேற்ற கூட்டணித் தலைவர்கள் யாரும் என்னிடம் கூறவில்லை. தேர்தல் முடிந்து வெற்றி பெற்ற பிறகு பேசி பிரதமர் யார் என்பதை முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று அவர்கள் கருதுகிறார்கள். இதைக்கூட தெரிந்துகொள்ள முடியாத நிலையில்தான் சில அரசியல் கட்சித் தலைவர்கள் இருக்கிறார்கள்’ எனப் பதிலடி கொடுத்தார்.