வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. ‌சிற‌ப்‌பித‌ழ்க‌‌ள்
  3. நவராத்திரி
Written By Sasikala

நவராத்திரி கொண்டாடப்படுவதன் பின்னணியில் உள்ள கதை

நவராத்திரி விழா ஆண்டு தோறும் புதுப்புது மாற்றங்களுடன் கொண்டாடப்படும் விழாக்களுள் ஒன்று. நவம் என்ற சொல்லுக்கு  ஒன்பது என்றும் புதியது என்றும் பொருள். மகிஷாசூரனை அழிப்பதற்காக அம்மன் ஒன்பது நாள் போர் செய்து பத்தாம் நாள்  வெற்றி பெறுகிறாள். 

 
சும்பன், நிசும்பன் என்ற அசுரர்கள் பிரம்மனின் அருளால் சாகாவரம்பெற்றனர். இருந்தாலும் தங்களுக்கு சமமான பெண்ணால்  மட்டுமே எங்களுக்கு மரணம் ஏற்பட வேண்டும் என்ற வரத்தை பெற்றிருந்தனர். எனவே தேவர்களை ஜெயித்தும் அதர்மங்களை  விளைவித்தும் வந்தனர். அவர்களது அழிவு காலத்தில் ஆதிபராசக்தியிடமிருந்து கவுசிகியும், காளிகா என்ற காலராத்திரியும்  தோன்றினர். காளிகாவுக்கு துணையாக முப்பெரும்தேவியின் வடிவான அஷ்டமாதர்களும் அஷ்ராத்திரிகளாக தோன்றினர்.
 
பிராம்மணி என்ற பிரம்ம சக்தி அன்ன வாகனத்தில் அட்சமாலை, கமண்டலத்துடனும் வைஷ்ணவி என்ற விஷ்ணுசக்தி கருட வாகனத்தில் சங்கு சக்கரம் கதை தாமரைப்பூவுடனும், மகேஸ்வரி என்ற சிவனின் சக்தி ரிஷப வாகனத்தில் திரிசூலம் மற்றும் வரமுத்திரையுடனும், கவுமாரி என்ற கார்த்திகேய சக்தி வேலாயுதத்துடனும் மாகேந்திரி என்ற இந்திரனின் சக்தி ஐராவதத்தில்  வஜ்ராயதத்துவம் வாராஹி என்ற வாராஹிருடைய சக்தி எருமை வாகனத்தில் கலப்பையுடனும், சாமுண்டா என்ற பைரவரின் சக்தி எம வாகனத்தில் கத்தியை ஏந்தியவளாகவும் நரசிம்மஹி என்ற நரசிம்மரின் சக்தி கூரிய நகத்தை ஆயுதமாகவும் கொண்டு  கமல பீடத்தில் தோன்றினார்கள். இவர்கள் காளிகா என்ற சண்டிகா தேவியுடன் ஒன்பது ராத்திரிகளாயினர் இந்த நவராத்திரி தேவதைகள் சும்ப நிசும்பர்களை ஒழித்தனர்.
 
அசுரர்களின் கொடுமையில் இருந்து விடுபட்ட தேவர்கள் கவுசிகியான அம்பிகையையும், நவராத்திரி தேவதைகளையும் போற்றி துதித்தனர். இந்த வைபவம் நவராத்திரி எனப்படுகிறது.