1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

சிறுநீரகம் தொடர்பான வியாதியை குணமாக்கும் நெருஞ்சி

நெருஞ்சில் ஒரு அற்புதமான மூலகை ஆகும், இதன் இலை, வேர், காய், பூ, தண்டு மற்றும் முள் என அனைத்தும் பயன்தரும். நெருஞ்சில் மணற்பாங்கான இடங்களில் தரையில் படர்ந்து காணப்படும். மஞ்சள் நிற மலர்களுடையது.
இதன் இலையை தண்ணீரில் சிறிது நேரம் வைத்தால், தண்ணீரின் அடர்த்தி மிகுந்து காணப்படும். எண்ணெய்போல் பிசுபிசுப்பு ஆகிவிடும். இது காமவர்த்தினி. ஆண்மை பெருக்கியாகவும், இந்த நீரில் பட்டு, நூல் துணிகளை ஊற வைத்து எடுக்க அழுக்கு, கறை அகலும். பட்டுத்துணிகளை சுத்தப்படுத்தும்.
 
நாம் உண்ணும் உணவின் சாரத்தின் பகுதி சிறு நீரகத்தில் நீராக பிரிக்கப்பட்டு சிறுநீராய் வெளியாகிறது. இந்நீரில் பல வகைப்பட்ட உப்புகள் நிறைந்திருக்கின்றன. இந்த உப்புகள் சிலவேளை சிறுநீரகத்தில் தங்கி உறைந்து பெருத்து வளர்கிறது. இதுவே கல்லடைப்பு நோயாகும். நெருஞ்சில் கல்லடைப்பு, நீரடைப்பு, நீர் எரிச்சல்,  நீர் வேட்கை, வெள்ளை நோய், வெப்ப நோய், சொட்டு நீர், முதலியவற்றை நீக்கும் குணமுடையது.
 
உடம்பு எரிச்சல், வெண் புள்ளி, மேகம் முதலியவற்றை யானை நெருஞ்சில் தீர்க்கும் குணமுடையது. ஆனை நெருஞ்சில் மலட்டுத் தன்மை, வெள்ளை, நீர்க்கடுப்பு, விந்தணு பெருக்குதல் போன்ற வேலைகளை செய்யும்.
நெருஞ்சில் செடி இரண்டு வேருடன் பிடிங்கி, ஒரு பிடி அருகம்புல்லுடன் சட்டியில் போட்டு ஒரு லிட்டர் நீர்விட்டு அரை லிட்டராகச் சுண்டக் காய்ச்சி குடி நீராகப் பயன்படுத்தலாம். 50 மி.லி. அளவு இரு வேளை மூன்று நாள் வெறும் வயிற்றில் குடித்து வர உடல் வெப்பம் தணியும். கண் எரிச்சல், நீர் வடிதல், சிறுநீர்  சொட்டாக வருதல் போன்றவை குணமாகும்.
 
நாட்பட்ட வெள்ளை நோயுடன் கூடிய நீர் கடுப்பிற்கு நெருஞ்சில் காயையும், வேரையும் ஒரே அளவாக எடுத்துக் கொண்டு அதனுடன், பச்சரிசி சேர்த்து கஞ்சி வைத்து அருந்தி வர குணமாகும்.