வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை கண்டறிவது எப்படி...?

இயற்கையாக விளையும் பழங்களைச் செயற்கை முரையில் விரைவில் பழுக்க வைத்து விற்பனைக்கு அனுப்பி விடுகின்றனர். குறிப்பாக, கார்பைடு கல் வைத்து  மாம்பழங்களைப் பழுக்க வைத்து சந்தைக்கு அனுப்புகின்றனர். இந்தப் பழங்களைச் சாப்பிட்டால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன.
ரசாயன பொருட்களை கொண்டு பழங்களை பழுக்கவைப்பது இப்போது அதிகரித்திருக்கிறது. கால்சியம் கார்பைடு, பாஸ்பரஸ், எத்திலீன் போன்ற ரசாயனங்கள் மூலமாகப் பழங்கள் செயற்கையாகப் பழுக்கவைக்கப்படுகின்றன. இப்படிப் பழுக்க வைப்பதால் அதன் இயல்பு பாதிக்கப்படுகிறது. 
 
மாம்பழம் மற்றும் வாழைப்பழம் சாப்பிடுவதே அதிலுள்ள மினரல்ஸ், மல்டி வைட்டமின்களுக்காகத்தான். ஆனால், செயற்கையாகப் பழுக்கவைக்கப்பட்டவற்றில்  இவை எதுவும் இருக்காது.
 
செயற்கையாகப் பழுக்க வைக்கப்பட்டவையா என்று எப்படிக் கண்டறிவது?
 
எந்தப் பழமும் பளபளப்பாக இருக்க வாய்ப்பில்லை. அப்படி இருக்கும் பழங்களைத் தவிர்த்து விடுவது நல்லது. பழுத்த மாம்பழம் கொஞ்சம்  கொழகொழப்பாகத்தான் இருக்கும். ஆனால், செயற்கையாகப் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் அப்படி இருக்காது.
 
இயற்கையாகப் பழுத்த பழங்கள் லேசாக அடிபட்டு, கசங்கி முறையான வடிவத்தில் இருக்காது. ரசாயனங்கள் மூலமாகப் பழுக்க வைத்தால் பழங்கள் முறையான வடிவத்தில் பழுக்காமல் திட்டு திட்டாக பழுத்திருக்கும்.
இயற்கையாகப் பழுத்த மாம்பழங்கள் மஞ்சள் நிறத்தில் மட்டுமல்லாமல், சற்று இளஞ் சிவப்பு நிறத்தோடு காணப்படும். மாம்பழத்தில் குறிப்பிட்ட ஓரிடத்தில் மட்டும் தீப்பட்டதுபோல கறுப்பாக இருந்தால், அது கார்பைட் கல்லால் பழுக்கவைக்கப்பட்டது.
 
இயற்கையில் காம்புப் பகுதிதான் கடைசியாகப் பழுக்கும். பழம் காம்பை நோக்கித்தான் பழுத்துக்கொண்டு செல்லும். செயற்கையாகப் பழுக்க வைக்கப்பட்டவை  அப்படி இருக்காது.