செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

வாய் மற்றும் வயிற்றில் உள்ள புண்களை ஆற்றும் இயற்கை மருந்து மணத்தக்காளி கீரை!!

தமிழகம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் தானாகவே வளர்ந்து இருக்கும் மணத்தக்காளி கீரையின் மருத்துவ பயன்களை பார்க்கலாம். மணத்தக்காளி வியர்வையும், சிறுநீரையும் பெருக்கி உடலிலுள்ள கோழையை அகற்றி உடலைத் தேற்றுகின்ற செய்கையை உடையது.


 
 
சமையலில் மணத்தக்காளி கீரையை பல வகைகளில்  பயன் படுத்தலாம். அது சளியை நீக்குவதோடு இருமல், இரைப்பு முதலியவைகளுக்கும் குணம் தரும். வாயிலும், வயிற்றிலும் உண்டாகும் புண்களை ஆற்றும் தன்மையும் இதற்கு உண்டு.  மணத்தக்காளி இலை, காய் பழம், வேர் இவற்றை ஊறுகாயாகவும், வற்றலாகவும், குடிநீராகவும் செய்து உண்டு வந்தால்  நோய்கள் நீங்கி உடல் வன்மை பெறும்.
 
மணத்தக்காளி இலையை இடித்து சாறு எடுத்து 35 மி.லி. வீதம் தினம் மூன்று வேளை அருந்தி வர உட்சூடு, வாய்புண், முதலியவை நீங்கும். சிறுநீரை வெளியேற்றும். தேகம் குளிர்ச்சியாகும். உடல் வசீகரம் ஏற்படும்.
 
மணத்தக்காளி இலைகளை பறித்து, தேவையான அளவு நெய்யுடன் சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும் .பின்னர் துவையல் செய்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் குணமாகும்.
 
பசுமையான இலைகளை மென்று சாற்றை விழுங்கலாம். இதே போல் ஒரு நாளைக்கு 5 முதல் 6 இலைகளை பச்சையாக  ந்மென்று சாப்பிட்டால் வாய்புண் வேகமாக குணமாகும். 
 
மணத்தக்காளி இலை சாற்றை 5 தேக்கரண்டி அளவில் தினமும் 3  வேளைகள் குடித்து வந்தால் உடல் உஷ்ணம் குறையும். நாக்குப்புண்,குடல்புண் குணமாக, மணத்தக்காளி இலையை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இவ்வாறு சாப்பிடும் போது அதிக காரம் சேர்க்கக்கூடாது.
                     
நாக்கு சுவையின்மை, வாந்தி உணர்வு ஆகியவற்றை போக்கும் தன்மை மணத்தக்காளி வத்தலுக்கு உள்ளது. எனவே கர்ப்பிணி பெண்கள் குறைந்த அளவில், தினமும் இந்த வத்தலை உணவுடன் சேர்த்துக் கொண்டு சாப்பிட்டு வரலாம். மார்பு சளி இளகி வெளிப்படவும், மலச்சிக்கல் குறையவும் மணத்தக்காளி வத்தல் பயன்படுகிறது. நாட்டு மருந்து கடைகளில் மணத்தக்காளி  வத்தல் கிடைக்கும்.