1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்
Written By Geetha priya
Last Modified: செவ்வாய், 8 ஏப்ரல் 2014 (15:49 IST)

மாலையிட்ட கையோடு கெஜ்ரிவாலை பளாரென்று அறைந்த ஆட்டோ ஓட்டுனர்

டெல்லியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் கன்னத்தில் அறைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள டெல்லியின் சுல்தான்புரி பகுதிக்கு சென்ற அரவிந்த் கெஜ்ரிவாலை ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் கன்னத்தில் அறைந்தார். 
 
தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தொண்டர்கள் மாலை அணிவித்துக்கொண்டிருந்தனர். அப்போது கெஜ்ரிவாலுக்கு மாலை அணிவித்த லாலி என்னும் ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் யாரும் எதிர்பாராத விதத்தில், 'பளார்' என்று கெஜ்ரிவால் கன்னத்தில் அடித்துவிட்டார்.  
 
இதனை கண்டு அதிர்ந்த ஆம் ஆத்மி உறுப்பினர்கள் உடனடியாக லாலியை பிடித்து தாக்க துவங்கினர். பின்னர் அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். 
 
நாடாளுமன்ற தேர்தலுக்காக முழுமூச்சாக  வாக்கு சேர்ந்து வரும் கெஜ்ரிவால் இப்படி தாக்கப்படுவது புதிது இல்லை. சமீபத்தில்  தட்சிணபுரி பகுதியில் பிரச்சாரம் செய்தப்போது  ஒரு நபர் கெஜ்ரிவாலை முதுகில் குத்தினார்.  இதே போல கடந்த மாதம் கெஜ்ரிவால்  மீது கருப்பு மை, முட்டை போன்றவை வீசப்பட்டது குறிப்பிடத்தக்கது.